நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க மசோதாவை ஏற்கனவே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப் பட்டது . தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் கடந்த 1ம் தேதி திருப்பி அனுப்பிய நிலையில் இன்று சட்டப்பேரவை கூடுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த மசோதாவை 142 நாட்களுக்கு பிறகு ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். நீட் தேர்வில் விலக்கு மசோதா என்பது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கு மாறாக உள்ளதாக ஆளுநர் மாளிகை தமிழக அரசுக்கு விளக்கம் அளித்து மசோதாவை நிராகரித்தது.
இந்நிலையில், மசோதா திருப்பி அனுப்பியதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி சனிக்கிழமை சட்டமன்ற அனைத்துகட்சி கூட்டம் நடைபெற்றது. அனைத்துக்கட்சி கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி சட்டமன்ற சிறப்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் இன்று காலை 10 மணியிலிருந்து நடைபெற்று வருகிறது.
இன்றைய சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா மீதான விவாதத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் உரை..
தகுதி என்ற போர்வையில் உள்ள நீட் தேர்வு என்ற தீண்டாமையை நாம் அகற்ற வேண்டாமா??
நீட் தேர்வு என்பது பணக்கார நீதியை பேசுகிறது; அரசியலமைப்பு என்பதே சட்டத்தின் நீதியை பேசுகிறது.
அரசியலமைப்புச் சட்டம் கூறக்கூடிய சமத்துவத்திற்கு எதிரானது நீட் தேர்வு என்று தெரிவித்துள்ளார்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி கூட்டத்தில் மீண்டும் அந்த சட்ட முன் வடிவினை விவாதித்து, அதனை மீண்டும் ஆளுநரின் ஒப்புதலை பெற அனுப்பி வைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.