கோவையைச் சேர்ந்த தமிழக மாணவர் சாய் நிகேஷ் ரவீந்திரன் என்பவர் உக்ரைனில் கார்க்கிவ் நகரில் விண்வெளி ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் விண்வெளி அறிவியல் படித்து வந்திருக்கிறார்.
உக்ரைன் ரஷ்யா நடத்தி வரும் தீவிர போர் காரணமாக உக்ரைன் அதிபர் ஜெலின்ஸ்கி அந்நாட்டு பொது மக்களுக்கு ஆயுதங்கள் ஏந்திப் போர் புரியலாம் என அறிவித்தார். மேலும் பிற நாட்டவரும் விருப்பம் இருந்தால் உக்ரைன் இராணுவத்தில் இணையலாம் என்று குறிப்பிட்டிருந்தார். அதன் பேரில் பலர் உக்ரைன் இராணுவத்தில் இணைந்து ரஷ்யாவிற்கு எதிராக போர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சாய் நிகேஷ் ரவீந்திரன் உக்ரைன் இராணுவத்தில் இணைந்ததாக இந்திய உளவுத்துறை அமைப்பான ரா(RAW) தெரிவித்துள்ளது. இந்தியா இந்த இரு நாடுகளுக்கும் எந்தவித ஆதரவும் தெரிவிக்கவில்லை. ஐ.நா சபை நடத்திய வாக்கெடுப்பில் இந்தியாவும் சீனாவும் பங்கேற்கவில்லை. ஆனால் மறைமுகமாக இந்தியா ரஷ்யாவிற்கு ஆதரவு நிலைப்பாட்டை தான் அளித்து வருகிறது.
ரா(RAW) அமைப்பு நேற்று இரவு கோவை வந்து நடத்திய விசாரணையில் சாய் நிகேஷ் ரவீந்திரன் இந்திய இராணுவத்தில் சேருவதற்கு முயற்சித்துள்ளார். ஆனால், உயரம் குறைவுக் காரணமாக இராணுவத்தில் சேர முடியவில்லை. மேலும் அவர் இந்திய வெளியுறவுத் துறை மூலம் அமெரிக்க இராணுவத்தில் இணைய முயச்சித்திருக்கிறார். ஆனால் அங்கேயும் சேர முடியாத காரணத்தால், இவர் உக்ரைன்க்கு விண்வெளி அறிவியல் படிப்பதற்காக சென்றுள்ளார்.
அங்கு போர் மூண்டதால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து ரஷ்யாவிற்கு எதிராகப் போர் செய்து வருகிறார் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த விடயம் இந்திய நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.