இந்த வெயிலுக்கு உடலை குளிர்விக்க இந்த மாதிரி சிறப்பான உணவை செய்து பாருங்கள். அப்படி என்ன உணவு என்று கேட்கிறீர்கள் தானே… அதுதான் ‘கோசம்பரி’. கர்நாடக மற்றும் ஆந்திர மக்கள் இந்த உணவை எல்லா விருந்துகளிலும் விழாக்களிலும் செய்வார்கள். அப்படி என்ன சிறப்பு என்பதை செய்து சாப்பிட்டு பாருங்கள்.
தேவையான பொருள்கள்:
- பாசிப்பருப்பு – அரை கப்
- கேரட்- கால் கப்
- வெள்ளரிக்காய் – கால் கப்
- தேங்காய்- கால் கப்
- மல்லித்தழை- சிறிதளவு
- இஞ்சி- கால் தேக்கரண்டி
- பச்சை மிளகாய்- ஒன்று
- எலுமிச்சை சாறு- ஒரு தேக்கரண்டி
- கடுகு- கால் தேக்கரண்டி
- கருவேப்பிலை- சிறிதளவு
- எண்ணெய், தண்ணீர், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- பாசிப் பருப்பை ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை நன்றாக ஊறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரை கப் பாசிபருப்புக்கு ஒரு கப் தண்ணீர் போதுமானதாக இருக்கும்.
- இதனிடையில் தேங்காவையும் கேரட்டையும் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். வெள்ளரிக்காய், இஞ்சி, பச்சமிளகாய், மல்லித்தழை ஆகியவற்றை தனித்தனியே பொடிப்பொடியாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பாசிப்பருப்பு ஊறியதும் அதை தண்ணீர் இன்றி நன்றாக வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் துருவிய தேங்காய் மற்றும் கேரட்டைச் சேர்த்து கலந்து விட வேண்டும்.
- மேலும் அதனுடன் பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், இஞ்சி, பச்சை மிளகாய் போன்றவற்றைச் சேர்க்க வேண்டும். இவற்றுடன் எலுமிச்சை சாறுவிட்டு உப்பு சேர்த்து கிளறிவிட வேண்டும்.
- திட்ட உணவுகளை கடைப்பிடிப்போர், இதை இப்படியே தாளிப்பு சேர்க்காமல் உண்ணலாம்.
- தாளிப்பிற்கு ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் கடுகு கருவேப்பிலை பொறித்து சேர்த்துக் கொள்ளலாம். மாங்காய் இருந்தால் அதையும் துருவி சேர்த்துக் கொள்வது நன்றாக இருக்கும்.
- அவ்வளவுதான் மிகவும் சுவையான கோசம்பரி உணவு தயார்.
- இது காலை உணவிற்கு மிகவும் உகந்தது. ஆனால் இந்த வெயில் காலத்தில் இதை எப்போது வேண்டுமானாலும் செய்து சாப்பிட்டால் உடம்பை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் சுறுசுறுப்பைக் கூட்டவும் உதவுகிறது.
சத்து: பாசிப்பருப்பில் அதிக கலோரிகள் இருந்தாலும் இதில் தேவையான அளவு புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. பாசிப்பருப்பில் கொழுப்பின் அளவென்பது மிகவும் குறைவாகும். ஆதலால் பாசிப்பருப்பு, திட்ட உணவுகளை கடைப்பிடிப்பவர்களுக்கு உகந்த தானியமாகும்.