இலங்கை கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில் அத்தியாவசிய பொருள்களுக்கான தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. இலங்கையின் முக்கிய பொருளாதார நிலையாக கருதப்படுவது தேயிலை உற்பத்தி தான், ஆனால் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இந்த தொழிலும் பெரும் வீழிச்சியைச் சந்தித்து மீளும் நிலையில், இலங்கையில் இருந்து அதிகம் தேயிலையை இறக்குமதி செய்யும் நாடு ரஷ்யா உக்ரைனுடனான போரில் ஈடுபட்டுள்ளதால் இன்னும் இந்தத் தொழில் வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் இலங்கையின் மற்றொரு முக்கிய வருவாயாக இருந்த சுற்றுலா பயணிகளின் வருகையும் வெகுவாக குறைந்ததால் பொருளாதரம் இன்னும் வீழ்ச்சி அதிகரித்துள்ளது. இதுமட்டுமல்ல வரலாறு காணாத அளவுக்கு ஒரு சவரன் தங்கத்தின் விலை 1.5 லட்சமாக இருப்பது வியப்படையச் செய்துள்ளது.
இதனால் மக்களின் அன்றாட தேவைக்கான பொருள்களின் விலை எப்போதும் உள்ள விலையை விட மூன்று மடங்கு அதிகரித்து காணப்படுகிறது. அத்தியாவசிய பொருள்களின் தட்டுப்பாட்டால் மக்கள் பல மணி நேரம் வீதிகளில் வரிசையில் நின்றபடி காத்துக் கிடக்கின்றனர். பால், கோதுமை, அரிசி, பருப்பு போன்ற பொருட்களின் விலைகளும் அதிகமாகியதால் ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் மக்கள் பஞ்ச நிலையில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் இந்த பொருள்கள் கிடைக்காததால் பட்டினியாலும் போராட்டத்தில் ஈடுபட்டும் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இலங்கையிலிருந்து மன்னார் வளைகுடா வழியாக தமிழர்களான மேரி கிளாரி, கஜேந்திரன், கியூரி, எஸ்தர், நிசாத் ஐவரும் ஒரு கைக்குழந்தையுடன் தமிழகம் வந்தடைந்துள்ளனர். இத்தகவல் அறிந்து கடலோர காவல் படையினர் தண்ணீர், உணவின்றி மணலில் அமர்ந்திருந்த அவர்களை மீட்டு மண்டப கடலோர காவல் முகாமில் தங்க வைத்தனர். பின்பு விசாரித்தபோது இலங்கையில் நிகழ்ந்து வரும் கடும் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தமிழகத்துக்கு வந்ததாக கூறியுள்ளனர்.
மேலும் அவர்களை ராமேஷ்வரம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டனர். நீதிபதி விஜய் ஆனந்த், கைக்குழந்தையுடன் கூடிய நால்வரை பதினைந்து நாட்கள் நீதிமன்ற காவலில் இருக்கவும் இரண்டு குழந்தைகளை சேலத்தில் உள்ள அவர்களின் பாட்டி வீட்டில் தங்கவைக்கவும் உத்திரவிட்டார்.
தமிழகத்தில் தஞ்சம் அடைந்தவர்களின் நிலையை கருத்தில் கொண்டு சிறையில் அடைக்காமல் முகாமில் தங்கவைக்க அரசாணை வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இலங்கைத் தமிழர்கள் இன்னும் அதிகமாக வரலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளதால் கடலோர காவல் படையினரின் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.