இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 9 பேருக்கு செப்டம்பர் 6-ம் தேதி வரை சிறை விதிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடந்த 22-ம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 9 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும், அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர்.
இலங்கையின் இந்நடவடிக்கையை தொடர்ந்து, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இந்நிலையில், திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நாகப்பட்டின மீனவர்களுக்கு செப்டம்பர் 6-ம் தேதி வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.