தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டுமென்றால் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 2 கோடி பிணைத்தொகை கட்டினால் விடுவிக்கப்படுவார்கள் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 23 ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் பன்னிரெண்டு பேர் இலங்கை கடற்படை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இன்று இலங்கை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து வருகின்ற 12 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்று இலங்கை நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
மேலும் மீனவர்கள் வெளியே வர வேண்டும் என்றால் ஒவ்வொரு மீனவருக்கும் ரூபாய் இரண்டு கோடி பிணைத்தொகை செலுத்த வேண்டும். அப்படி தந்தால் விடுவிக்கப்படுவார்கள் என்று தீர்ப்பளித்தது இலங்கை உச்ச நீதிமன்றம். இது தமிழக மீனவர்களை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. இத்தனை நாட்கள் சிறையில் இருந்த நிலையில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவ்வாறு இலங்கை நீதிமன்றம் உத்திரவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 12 மீனவர்களையும் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கடுமையான பஞ்சம் நிலவி வருவதால் மக்கள் பசியிலும் பட்டினியிலும் தவித்து வருகின்றனர். அன்றாட தேவைக்காக மக்கள் வரிசையில் பல மணி நேரங்களாக நின்றும் வருகின்றனர். மக்கள் அனைவரும் ராஜபக்சே குடும்பத்தை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டும் வருகின்றனர். இந்தியாவும் அரிசி, பணம் என பல்வேறு அத்தியாவசிய பொருள்களை இலங்கைக்கு மானியமாக கொடுத்து உதவிகளைச் செய்து வருகிறது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரால் ஆறு ஒப்பந்தங்கள் இலங்கையில் கையெழுத்தானது. இதில் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு ஒப்பந்தம் முக்கிய பங்கு வகித்தது. மேலும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் கடல் கண்காணிப்பு போக்குவரத்து மற்றும் இந்தியாவின் ஆளுமை மிகும் என்று நம்பப்பட்டது.
இந்நிலையில் இலங்கை அரசின் பொருளாதார நிலையை மேம்படுத்த இலங்கை நீதிமன்றம் இவ்வாறு பிணைத்தொகையை உயர்த்தி கேட்கிறது என்று மக்களால் பேசப்படுகிறது.