புதுச்சேரி கூனிமுடுக்கு பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்புடைய எரி சாராயத்தை அம்மாநில காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரியில் எரி சாராயங்கள் பதுக்கப்பட்டு தமிழக பகுதிகளுக்கு கடத்தப்படுவதாக புதுச்சேரி கலால் துறைக்கு தகவல்கள் வந்தது. இந்த தகவலின்படி, துணை ஆணையர் சுதாகர் அறிவுறுத்தலின்பேரில் தாசில்தார் சிலம்பரசன், ஆய்வாளர் ரமேஷ், துணை ஆய்வாளர் பாஸ்கர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு புதுச்சேரியில் உள்ள அனைத்து பகுதிகளும் கண்காணிக்கப்பட்டு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்று காலை 02.30 மணி அளவில் பிள்ளையார் குப்பத்தை அடுத்த கூனிமுடுக்கு பகுதியில் எரி சாராயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக துணை ஆய்வாளர் பாஸ்கர் தலைமையிலான தனிப்படைக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, ஆய்வாளர், துணை ஆய்வாளர் மற்றும் காவலர்கள் ஏகலைவன், குமரன், லெனின்கருணா ஜோதி ஆகியோர் அடங்கிய தனிப்படை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஏழுமலை என்பவரது வீட்டில் 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட 47 வெள்ளை கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 5 லட்சம் மதிப்புடைய எரி சாராயத்தை கலால்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து வீட்டின் உரிமையாளரான ஏழுமலையை கலால் துறையினர் தேடி வருகின்றனர்.
கோடிக் கணக்கில் ஏலம் போன வீரர்கள்; சென்னை அணியில் இணைந்தவர்கள் யார்?