தளபதி விஜய், இளைய தளபதி விஜயாக இருந்த சமயத்தில் வெளிவந்து தமிழகத்தையே மிரளவைத்த திரைப்படம்தான், கில்லி! தரணி இயக்கத்தில் விஜய், பிரகாஷ் ராஜ், திரிஷா அவர்கள் நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் கில்லியாகும். கில்லி திரைப்படத்திற்கு இசையமைத்தவர் வித்யாசாகர்!
2022 ஆம் ஆண்டிலும் கில்லி திரைப்படத்தையும், கில்லி திரைப்பட பாடலையும் ரசித்து பார்ப்பவர்களையும், கேட்பவர்களையும் நம்மால் பார்க்க முடியும். ஏன்? இதைப்படிக்கும் நீங்களும் அவற்றில் ஒருவராக இருக்கலாம். கில்லி திரைப்படத்தை பல முறை பார்த்தவர்கள் கூட, கில்லி திரைப்படத்தின் பாடலென்று கேட்டால் ஒரு பாடலை தவறவிட்டு விடுவர். பலரும் தவறவிட்ட அச்சிறு பாடலினை குறித்த சிறு கட்டுரைதான் இது!
கபடி கபடி , அர்ஜூனர் வில்லு, கொக்கர கொக்கரக்கோ, ஷா லாலா, அப்படி போடு போடு, சூரத்தேங்கா போன்ற பாடல்கள் இருப்பதை நாம் பலரும் அறிவோம். ஆனால் இவை அல்லாது ஒரு பாடல் உள்ளது. வேலுவின் மீது தனக்கு நேர்ந்த காதலை தனலட்சுமி வெளிப்படுத்தாமல் இருக்க.., தீடிரென்று ஊருக்கு செல்ல தனலட்சுமியை அயல்நாட்டில் உள்ள அவளின் உறவினரின் வீட்டுக்கு அனுப்பிவைக்க வேலு முடிவெடுப்பான். அயல்நாட்டில் உள்ள உறவினரின் வீட்டுக்கு செல்வதற்காக தனலட்சுமி வேலுவின் வீட்டில் தங்கியிருந்தாலும், அயல்நாட்டிற்கு புறப்படும்போது, போக வேண்டாம் என்ற உள் மனநிலையை கொண்டுதான் தனலட்சுமி புறப்படுவாள்.
இப்புறப்பாட்டின் போது, வேலுவோடு பேருந்தில் தனலட்சுமி பயணப்பட.. காதலை சொல்லத் தவிக்கும் மனதையும், போகாதே என்று வேலு சொல்லமாட்டானா என்ற ஏக்கத்தையும் ஒருசேர தன் உள்ளத்தில் மட்டுமல்ல முக பாவனைகளிலும் வைத்திருப்பாள், தனலட்சுமி. இப்படியான சமயத்தில் வித்யாசாகரின் பின்னனி இசை மெதுவாக உருவெடுக்க அதனூடே பா.விஜய் எழுதிய வரிகள் சுஜாதா குரலில் மென்மையாய் ஆரம்பிக்கும்.
அந்த மென்மையான பாடலுக்குள் கடலளவு ஏக்கமும், தவிப்பும் கலந்து இருக்கும். வரிகளை நோக்கினாலும், அப்பாடலின் காட்சிகளை நோக்கினாலும் அப்பாடலினூடே உறைந்திருக்கும் உணர்வுகள் நமக்கு எளிதாய் விளங்கும்.
காதலா காதலை
காதலால் சொல்லடா
மௌனமாய் கொல்வது
நல்லதல்லடா
தனலட்சுமியின் ஏக்கமானது வரிகளிலும், அவள் கண்களிலும், வேலுவை அவள் நோக்கும் பார்வையிலும் வெளிப்பட தனலட்சுமியை ஊருக்கு அனுப்பி விட மட்டுமே போராடிக் கொண்டிருக்கும் வேலுவிற்கு தனலட்சுமியின் ஏக்கம் புரியாது.
திரைப்படத்தில் கபடி விளையாடிக் கொண்டிருக்கும் வேலு தனலட்சுமியின் மனதுடன் விளையாடுவதை,
உயிரிலே உயிரிலே
சடுகுடு ஆடினாய்
உண்மையில் உண்மையில்
புரியாமல் போகிறாய்
என்ற வரிகளின் மூலம் தெளிவாய் விளக்கியிருப்பார், பாடலாசிரியர் பா.விஜய். ஒரு நிமிடத்திற்கும் குறைவான கால அளவை கொண்ட இப்பாடலானது தனலட்மியின் பரிதவிப்பை விரிவாய் சுருக்கமாய் சொல்லிச்சென்ற விதம் அழகியல்!