கடந்த நான்கு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் உணவுப்பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. இந்த வருடமும் மழை பொய்க்கும் நிலையில், 1.4 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
ஆப்பிரிக்காவின் கொம்பு என்று அழைக்கப்படும் நாடான சோமாலியா முன்னொரு காலத்தில் நன்கு செல்வ செழிப்புடன் வளமான நாடாகவே இருந்தது. அங்குள்ள மக்களின் பிரதான தொழிலாக மீன் பிடித்தலும், விவசாயமும் இருந்தது. பன்னாட்டு மீன்பிடி நிறுவனங்களின் தலையெடுப்புக்குப்பின் கடல் வளங்கள் அழிக்கப்பட்டும், அந்நாட்டுக் கடல்பகுதிகளில் கழிவுகள் கொட்டப்பட்டும் கடல் வளங்கள் அழிக்கப்பட்டன. அதன்பின்பு கடும் உணவுப்பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட அந்நாட்டு மக்கள் உணவுக்காக மண்ணைத் தின்னும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இந்நிலையில் தற்பொழுது கடந்த 4 தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு அங்கு வறட்சி ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் ஒருமுறை கூட மழை அந்நாட்டில் பெய்யாததால், அங்குள்ள மக்களின் விளைநிலங்களில் ஏதும் விளையாமல் அவர்களின் கால்நடைகள் உயிரிழந்து வருகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் சோமாலியாவின் பார்தேரி நகர்புறங்களில் உணவுதேடி அலைந்து வருகின்றனர். கடந்த பத்தாண்டுகளாக தொடர்ச்சியாக அங்குள்ள மக்கள் மீசல்ஸ் தட்டம்மை நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளாவிய வானிலை முறைகளின் அடிப்படியில் இந்த ஆண்டும் மழை பொய்க்கும் எனவே கணிக்கப்பட்டுள்ளது. பஞ்சம் ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு இந்தப் பகுதி இதுவரை காணாத அளவுக்கு வறட்சியைச் சந்திக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு நடக்கும் பட்சத்தில் சுமார் 1.4 மில்லியன், 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவர் என உலக உணவு அமைப்பு கூறியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகளின் உயர்மட்ட காலநிலை அறிவியல் ஆணையம் பருவநிலை மாற்றம் காரணமாக வெப்பஅலை, தீவிர மழை மற்றும் வறட்சியினால் அடிக்கடி பாதிப்பு ஏற்படும் என தெரிவித்திருந்தது.
இவ்வாறு, சோமாலியா நாடே பெரும்துயரத்தை எதிர்நோக்கி இருக்கும் நிலையில் ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு மற்றும் உலகநாடுகள் யாரேனும் உதவிக்கரம் நீட்டுவார்களா ? என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.