கூடங்குளத்தில் தற்போது செயல்பட்டு வரும் இரண்டு அணு அலகுகளிலிருந்து உருவாகும் அணுக் கழிவுகள் அணு உலைக்குக் கீழேயே சேமிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்த அணு உலைகளில் இருந்து உற்பத்தியாகும் கழிவுகளை உலைக்கு வெளியே சேமித்து வைப்பதற்கான Away From Reactor மையத்தை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
இத்திட்டம் குறித்து விவாதிக்க இந்திய அணுசக்தி கழகத்தின் (NPCIL) தலைவரும், நிர்வாக இயக்குநருமான புவன் சந்திரபதக் கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு வசதியை உருவாக்குவது குறித்து தமிழக அரசிடம் விவாதிக்க சென்னை வரவிருக்கிறார்.
இந்நிலையில், இந்நிகழ்வு குறித்தும், இத்திட்டம் குறித்தும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில், “அணுமின் நிலைய தளத்தில் அணுக்கழிவினை சேமிப்பது, நீண்டகால தாக்கமாக ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றிற்கு ஆபத்தை ஏற்படுத்தும். அணு உலையின் அருகில் சேமிக்கும் (Away From Reactor – AFR) முறைக்கு மக்களிடமும் பெரும் எதிர்ப்பு உள்ளது
எனவே தமிழர்களின் ஒருமித்த கருத்தான கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கான எதிர்ப்பினை பதிவு செய்வதோடு, எந்நிலையிலும் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதற்கு அனுமதி வழங்கிடவும் கூடாதென தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.