Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தாய்த்தமிழகத்தில் தஞ்சம்கேட்டு வரும் தமிழர்களை சிறையில் அடைப்பதா? ஆளுங்கட்சிகளை கடிந்த சீமான்!

    தாய்த்தமிழகத்தில் தஞ்சம்கேட்டு வரும் தமிழர்களை சிறையில் அடைப்பதா? ஆளுங்கட்சிகளை கடிந்த சீமான்!

    ரஷ்யா – உக்ரைன் போர் ஏற்கனவே உலக மக்களைத் துயரடையச் செய்திருக்கும் நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையால் இலங்கை மக்கள் ஆளாகிக் கொண்டிருக்கும் இன்னல்கள் உலக மக்களை மேலும் துயரடையச் செய்து வருகின்றன. பசிப்பட்டினி, அன்றாட அடிப்படைத் தேவைகளில் போதாமை என பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். 

    இதனின் விளைவாக, தமிழகத்தை நம்பி அடைக்கலம் நாடி, படகுகள் மூலம் பல இலங்கை வாழ் தமிழர்கள் தமிழகத்தை வந்தடைந்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் வருகிற தமிழர்களை தமிழக காவல்துறை கைது செய்வதாக தகவல்கள் வந்தன. இந்நிலையில் பலரும் இத்தகைய கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

    இப்படியான சூழலில்தான், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், ‘இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியின் விளைவினால் அத்தியாவசியப்பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்து, அந்நாட்டுக் குடிமக்கள் அன்றாடச்செலவினங்களைக்கூட எதிர்கொள்ள முடியாது, வறுமைக்கும், ஏழ்மைக்கும் உள்ளாகி, தவித்து வருகிற செய்திகள் கவலையளிக்கின்றன’ என தன் அறிக்கையில் தெரியப்படுத்தியுள்ளார். 

    மேலும், சிங்கள இனவெறிப்பிடித்து, தமிழர்களை அழித்தொழிக்க, உலகெங்கும் கடன்களை வாங்கிக்குவித்து, நாட்டு மக்களின் வாழ்வியல் மேம்பாட்டிலும், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியிலும் கவனம் செலுத்தாத கொடுங்கோல் சிங்கள ஆட்சியாளர்களின் இனவெறிச்செயல்பாடுகளே இத்தகைய நிலைக்குக் காரணமென்றும், இந்நிகழ்வுகளால் இன்றைக்கு தமிழர்களும் சேர்ந்துப் பாதிப்புக்குள்ளாகி நிற்பது பெரும் மனவேதனையைத் தருகிறது என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

    இவ்வளவு ஆண்டுகளாக, சிங்கள ஆட்சியாளர்களின்  இன ஒதுக்கல் நடவடிக்கைகளால் அடக்கி ஒடுக்கப்பட்டு, கொடும் துயரத்திற்கு ஆளாகி நின்ற தமிழ்ச்சொந்தங்கள், இப்போது பொருளாதார நெருக்கடியினாலும், வறுமையின் கோரப்பிடியினாலும் வாடி வதங்கி, வாழ்க்கையை நடத்த முடியாத துயர்மிகு சூழலில், நாளும் அல்லல்பட்டு வருவது பெரும் மனவலியைத் தருகிறது எனவும் அவர் தெரிவித்தார். 

    இத்தகைய கையறு நிலையில், தாய்த்தமிழகத்தில் தஞ்சம்கேட்டு, கடல்வழியாக, படகுகளின் மூலம் அடைக்கலம் தேடிவரும் ஈழச்சொந்தங்களை வழக்குகள் போட்டு கைது செய்வது மேலும் துன்பத்திற்குள்ளாக்குவது கொடுமை என்பதைத் தன் அறிக்கையில் சீமான் பதிவு செய்தார். அதிலும் பெற்றோர்களையும் குழந்தைகளையும் பிரித்து சிறையிலும் முகாம்களிலும் அடைப்பதற்கு தன்னுடைய கடும் கண்டனத்தையும் அவர் வெளிப்படுத்தினார். 

    “அனைத்தையும் இழந்து வரும்  நம்மக்களை ஆரத்தழுவி அரவணைத்து, திபெத்திய ஏதிலிகளுக்கு இந்நாடு வழங்கியிருக்கிற சலுகைகளையும், வசதிகளையும் போல, நம் சொந்தங்களுக்கும் செய்துகொடுத்து, அவர்களைக் காக்க முன்வர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறேன்” என தன் அறிக்கையின் இறுதியில் குறிப்பிட்டார், சீமான். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....