மதிப்புமிக்க ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழக்கத்தில் தொடர்ந்து இடதுசாரி அமைப்புக்கும், அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்புக்கும் தொடர்ந்து பிரச்சினைகள் வந்த வண்ணமே உள்ளன. இரு அமைப்பினருக்கும் ஒத்துவராது என்ற நிலைமை அனைவருக்கம் தெரியும்.
கடந்த 2020 ஆம் ஆண்டுகூட சிஏஏ போராட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழக்கத்தில் வெடித்தது. அப்போது கூட ஏபிவிபி என்று அழைக்கப்படும் அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பினர் ஆயுதங்களையெல்லாம் கொண்டு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்ட்ட மாணவர்களின் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், சமீபத்தில் டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதியில் அசைவ உணவு அருந்தியதற்காக, மாணவர்கள் மீது அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொடும் தாக்குதல் நடத்தினர். அறுபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தாக்குதலின்போது காயமடைந்தனர்.
இந்த செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்று கூறிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், உணவு எனும் தனிமனித உரிமையில் தலையிட்டு, அதற்காகத் தாக்குதல் தொடுத்திருக்கிற பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தைச் சேர்ந்தவர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என்றார்.
மேலும், “உணவு, உடை, வழிபாடு போன்றவையெல்லாம் தனிமனித விருப்பங்களைச் சார்ந்தவையாகும். அவற்றை மறுத்து, இடையூறு செய்வதும், அதனைக் காரணமாகக் காட்டி வன்முறைக்கு வித்திடுவதுமான மதவெறிச்செயல்கள் எதன்பொருட்டும் ஏற்புடையதல்ல” என்றும் அவர் தெரிவித்தார்.
அதோடு, இவையாவும் இந்திய அரசியலமைப்புச்சாசனம் வழங்கும் அடிப்படை உரிமைகளையே மறுக்கும் மனித உரிமை மீறல் என்றும் சீமான் பதிவிட்டார். பாஜகவின் ஆட்சியதிகாரம் தொடங்கப்பட்டக் காலத்திலிருந்து, இதுபோன்ற மோதல்களும், தாக்குதல்களும் இந்தியப்பெருநிலம் முழுமைக்கும் அதிகரித்து வருவது நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் கீழானச் செயல்கள் எனவும் சீமான் குறிப்பிட்டார்.
ஆகவே, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதியில் அசைவ உணவு உண்டதற்காக தாக்குதல் தொடுத்திட்ட அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது கல்லூரியின் நிர்வாக ரீதியாகவும், சட்டரீதியாகவும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்வதாக சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.