கண்டிப்பாக நாம் அனைவரும் கனவுகள் கண்டிருப்போம். கனவுகள் பொதுவாக நாம் தூங்கும் போது தான் வருகிறது. கனவைப் பற்றி சில கோட்பாடுகள் உள்ளன.
முதல் அறிவியல் கோட்பாடு:
நாம் காணும் கனவுகள் மூளையானது சேகரித்து வைத்த தகவல்களைச் செயல்படுத்தவும் சேகரித்த தகவல்களை நினைவு கூறவும் உதவுகின்றன என சில கோட்பாளர்கள் கூறுகின்றனர். இந்தக் கோட்பாட்டின் மூலம் பார்த்தால் கனவுகள் நமக்கு வருவதற்கு காரணம் நம்மையும் நமது மூளையையும் எச்சரிக்கை செய்வதற்காகத் தான் என்கின்றனர்.
நாம் பொதுவாக பயம், பதற்றம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் கனவுகளையே தான் அதிகம் காண்கிறோம். குறிப்பாக சொல்லப் போனால், யாரோ ஒருவர் அல்லது ஏதோ ஒரு மிருகம் துரத்துவது போன்று காண்பது.
இதற்கு முக்கியக் காரணமாக நமது ஆதிகால வாழ்க்கையைக் குறிப்பிடுகின்றனர். அக்காலத்தில் மனித இனம் மலைக் குகையில் இருட்டில் வசித்து மிருகங்களை வேட்டையாடி உண்டு வந்தனர். காட்டில் இருப்பதால் பல மிருகங்களின் அச்சுறுத்தல் இருந்திருக்கும். அதனால் பயம் பதற்றம் இருந்தது, மேலும் அடுத்த நாள் எப்படி இருக்கும் என்பது போன்ற குழப்பங்கள், அதனால் கூட இது மாதிரியான கனவுகள் வரலாம் என்கின்றனர் அறிவியல் கோட்பாளர்கள்.
இரண்டாம் அறிவியல் கோட்பாடு:
நாம் உறங்கும் போது ஆழ்மனமானது நாம் அந்த நாளில் பார்த்த, கேட்ட, செய்த பல விடயங்களை நாம் பின்னர் நினைவுக்கு கூறுவதற்கு தகவல்களைச் சேமித்து வைக்கும். அப்படிச் சேமித்து வைக்கும் சமயத்தில் நம் மூளையில் ஏற்படும் மின் காந்த அதிர்வினால் உணர்வுள்ள புறணி (conscious cortex) பகுதியைத் தாக்குவதால் கனவுகள் உருவாகின்றன என்பது ஒரு கோட்பாடு.
இதனால் தான், நாம் காணும் கனவின் ஆரம்பம் மற்றும் முடிவுகள் என எதுவும் இல்லாமல் இருக்கும். காரணம், ஆழ்மனதில் ஏதோ ஓர் இடத்தில் நடந்துக் கொண்டிருப்பதால் தான். இந்த மின்காந்த அதிர்வால் மூளையின் இருபுறங்களாக நாம் கருதக் கூடிய கான்ஸியஸ் மற்றும் சப் கான்ஸியஸ் மைண்ட் என இரண்டிலும் ஏற்படும் மாற்றத்தினால் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இப்போது தெரிந்துக் கொண்டீர்களா கனவுகள் ஏன் வருகின்றன என்று!
நம்மையே கவர்ந்து இழுக்கும் கண்ணின் அறிவியல் உண்மைகளை இங்கே காணுங்கள்!