சீனா இன்னொரு முறை இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தால், ரஷ்யா உதவிக்கு வரும் என்று நினைக்க வேண்டாம் என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் தலீப் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீன ராணுவம் கடந்த சில மாதங்களாக இந்திய எல்லை பகுதியான லடாக்கில் அத்துமீறி நுழைந்து வருகிறது.இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டு இருநாடுகளும் தங்களது படைகளை குவிக்கத் தொடங்கின. இந்திய-சீன போர் வெடிக்கும் தருவாயில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு படைகள் எல்லையில் இருந்து திருப்பி பெறப்பட்டன.
சமீபத்தில் இந்தியாவுக்கு அவசர பயணமாக வந்திருந்த சீன வெளியுறவுத் துறை அமைச்சரிடம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதுகுறித்து அறிவுறுத்தியிருந்தார்.
அதேசமயத்தில் தான் உக்ரைன்-ரஷ்ய போரும் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா எந்த நாட்டின் பக்கமும் சார்பு எடுக்காமல் நடுநிலை வகித்து வருகிறது. ரஷ்யா காலம் காலமாக இந்தியாவின் நட்பு நாடு என்பதாலும், அமெரிக்கா உக்ரைனின் பக்கம் நிற்பதாலும் இந்தியா இந்த நிலைப்பாடைத் தொடர்கிறது.
இந்த நிலையில் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை துணை ஆலோசகரான தலீப் சிங். இவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவர் ஆவார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்த தலீப் சிங், ஜோ பைடனுக்கு பாதுகாப்பு மற்றும் சர்வதேச பொருளாதார ரீதியாக ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
அமெரிக்கா ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கையாக அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. ரஷ்ய வங்கிகள் முடக்கப்பட்டன. இதனால் ரஷ்யா பொருளாதார அளவில் பெரும் சிக்கலை சந்தித்தது. இந்நிலையில் தலீப் சிங் ரஷ்யாவுக்கு எதிராக ஆதரவு திரட்ட உலக நாடுகளுக்கு நேரில் சென்று பேசி வருகிறார்.
தலீப் சிங் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹரிஷ் வர்தனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின்பு, செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ரஷ்யாவுடன் எந்த நாடும் வர்த்தகத்தில் ஈடுபடுவதை நாங்கள் விரும்பவில்லை என்று கூறியுள்ளார். இந்தியாவின் ரஷ்யாவுடனான கச்சா எண்ணெய் வர்த்தகம் தவறில்லை, அது அமெரிக்க விதிகளை மீறவில்லை.
மேலும், ரஷ்யாவுடன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தை அதிகரிப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை. அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை நட்பு நாடுகளை மதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா-சீனா மிகவும் நட்பு நாடுகளாக உள்ளன. எனவே, இந்திய-சீன எல்லை விவகாரத்தில் ரஷ்யா இந்தியாவுக்கு உதவாது என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
இப்படித் தான் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறது இந்தியா. ஆனால், இந்தியாவின் முடிவு உலக அரங்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம்.