போரின் தீவிரம்
இரஷ்ய உக்ரைன் போரின் தீவிர நிலையை கண்டு உலக நாடுகளும், உலக மக்களும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கின்றனர். போரின் தீவிரம் சற்றும் குறையாத நிலையில் உக்ரைன் மீது போரைத்தொடுத்த ரஷ்யாவின் மீது உலக நாடுகள் பலவும் பொருளாதர தடையை விதித்து வருகின்றனர்.
பொருளாதார தடை
ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு ஆதாரமாய் விளங்கும் கச்சா எண்ணெயை இனி அமெரிக்கா அரசு வாங்காது என தெரிவித்திருக்கிறது. ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்கா கச்சா எண்ணெயை வாங்கிக்கொண்டிருந்த நிலையில் தற்போது அமெரிக்கா இப்படியான நடவடிக்கையை மேற்கொண்டதால் ரஷ்யா பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை அடைந்துள்ளது.
அமெரிக்காவின் இம்முடிவால், அமெரிக்காவின் நட்பு நாடுகள் பலவும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போவதாகவும் கூறி வருகின்றனர். இதனால் ஏற்கனவே பொருளாதார பாதிப்பில் இருக்கும் ரஷ்யா இன்னும் இக்கட்டான சூழ்நிலைகளுக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆப்பிள், நெட்ஃபிளிக்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. மேலும், மெக்டொனால்ஸ், கேஃப்சி, போன்ற உணவு நிறுவனங்களும் ரஷ்யாவில் முழுவதுமாய் மூடப்பட்டுள்ளது. கோக கோலா, பெப்சியும் தங்களின் செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளது. ரஷ்ய விமானங்களின் போக்குவரத்தையும் அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற முக்கிய நாடுகள் தடை செய்துள்ளன.
வீழ்ச்சியில் இரஷ்யா
இப்படியான பொருளாதார தடைகளால் ரஷ்ய நாட்டின் பண மதிப்பு 30 சதவீத அளவுக்கும் பங்குச்சந்தைகள் 40 சதவீத அளவுக்கும் வீழ்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே விலைவாசி போன்ற பொருளாதாரப் பிரச்னையில் சிக்கி தவிக்கும் ரஷ்யாவுக்கு இந்த வீழ்ச்சி பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவும் தனது பங்குக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, ஐஸ்லாந்து, ஜப்பான், மொனாக்கோ, மான்டெனெக்ரோ, நியூசிலாந்து, நார்வே, தைவான், சான் மரினோ, சிங்கப்பூர், தென் கொரியா, ஸ்விட்சர்லாந்து, உக்ரைன் ஆகிய 16 நாடுகளை தனது நட்பு நாடுகளின் பட்டியலில் இருந்து விலக்குவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவிடம் உதவி
ரஷ்யா விலக்குகளை அறிவித்தாலும், தங்களின் கச்சா எண்ணெயை வாங்கிக்கொள்ளுமாறு பல நாடுகளை ரஷ்யா அணுகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவிற்கு, ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான ரோஸ்நெஃப்ட் சந்தை விலையை விட 25 சதவீதம் வரை குறைவான விலையில் கச்சா எண்ணெய் தர முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிடம் நூதனமாய் ரஷ்யா கேட்கும் உதவியாகவே இந்நிகழ்வு உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது. சரிந்துவரும் பொருளாதார நிலையை மீட்க கச்சா எண்ணெய், எரிவாயு, நிலக்கரி போன்றவற்றின் விற்பனை ரஷ்யாவுக்கு அத்தியாவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.