பிரிமியர் லீக்கில் கடந்த மார்ச் 12ல் நடைபெற்ற டோட்டன்ஹாம் அணிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்ததன் மூலமாக, உலக கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையையைப் படைத்தார் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
நடந்து கொண்டிருக்கும் பிரிமியர் லீக்கில் கடந்த மார்ச் 12ஆம் தேதி மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் டோட்டன்ஹாம் அணிகளுக்கிடையேயான லீக் போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓல்ட் ட்ரோபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் அற்புதமாக ஆடிய மான்செஸ்டர் யுனைடெட் அணியினர், டோட்டன்ஹாம் அணியினரை ( 3-2 ) என்ற கோல் கணக்கில் வீழ்த்தினர். உலகின் நட்சத்திரக் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். டோட்டன்ஹாம் அணியின் சார்பாக ஹேரி கேன் 35வது நிமிடத்திலும், ஹேரி மேக்குயின் 72வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
12, 38, மற்றும் 81வது நிமிடங்களில் கோல் அடித்த இவர், தான் அடித்த மூன்றாவது கோலின் மூலம் உலகிலேயே அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இதற்கு முன் ஆஸ்திரிய முன்னாள் கால்பந்து வீரர் ஜோசப் பைகன் அடித்த 805 கோல்களே உலக சாதனையாக இருந்தது. தற்பொழுது, ரொனால்டோ 806 கோல்களுடன் இந்த உலக சாதனையை முந்தினார்.
அவரின் இந்த புதிய உலக சாதனையைப் பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். பிபாவின் அங்கீகரிக்கப்பட்ட போட்டிகளில் பலவற்றிலும் விளையாடி வரும் ரொனால்டோ இந்த உலக சாதனையைப் படைத்துள்ளார். ரொனால்டோ அடித்த 806 கோல்களில், ரியல் மாட்ரிட் அணிக்காக 450 கோல்களையும், ஜுவென்டஸ் அணிக்காக 101 கோல்களையும், மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 135 கோல்களையும், போர்ச்சுகல் அணிக்காக 115 கோல்களையும் மற்றும் ஸ்போர்ட்டிங்காக 5 கோல்களையும் அடித்துள்ளார்.
ரொனால்டோவின் இந்த புதிய சாதனையை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
ஐஎஸ்எல் அரையிறுதி : ஜாம்ஷெட்பூரை வீழ்த்தியது கேரளா !