கொரோனா நம் வாழ்வில் வந்து ஏற்படுத்திய பாதகங்கள் கொஞ்சம் அல்ல! பலரின் வாழ்வு தலைகீழாக புரண்டு போனது. பலருக்கு வாழ்வே இல்லாமல் ஆனது. இறப்புகள், இழப்புகள் என பல துயரங்களை கொரோனா நமக்கு காட்டிவிட்டது. கொரோனா உக்கிரத்தில் இருந்த சமயத்தில் நேர்ந்த இழப்புகளில் இருந்து இன்னும் பலர் மீளவில்லை.
ஒரே முறை வந்து செல்லாமல் கொரோனா வைரஸ் அவ்வப்போது உருமாறி டெல்டா, டெல்டா பிளஸ், ஒமிக்ரான் என நம்மை வாட்டி வதைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
ஒவ்வொரு முறை ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்போதும், வாழ்வின் மீதான பயம் பலருக்கும் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தில் மற்றும் ஏழ்மையில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் கொரோனா காலக்கட்டம் கொடுமையாகவே இருந்தது. அதனின் தாக்கங்கள் இன்றளவும் கொடுமையாகத்தான் இருக்கிறது.
இந்நிலையில், உலகையே அசச்சுறுத்திய கொரோனா பரவலின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் மக்கள் சற்றே நிம்மதி பெரு மூச்சு விடுகின்றனர்.
நம் இந்திய நாட்டிலும் கொரோனா தொற்றின் பரவல் குறைந்து வருவதால், அமலில் உள்ள பொதுக் கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கையை ஏற்றுள்ளது.
இதன் மூலம், தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொள்ளுமாறு யூனியன் பிரதேசங்களையும், மாநில அரசுகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மத்திய உள்துறை செயலாளர் அஜெய் பால்லா, மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்த ஸ்பாக்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் போன்றவற்றை அந்தந்த பகுதிகளின் நிலவரத்திற்கு ஏற்றவாறு இயங்க அனுமதிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.