2022 வருடத்தின் தொடக்கமே கொரோனாவின் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தான் தொடங்கியது. ஜனவரி ஆரம்பிக்க, கொரோனா பரவலும் அதிகரித்தது. பரவல் அதிகரித்ததன் விளைவாக கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டன.
கொரோனாவையோட்டி தமிழகத்தில் திரையரங்குகளுக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆதலால் பல பெரிய திரைப்படங்களின் வெளியீடும் தள்ளிப்போனது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அஜித்குமார் நடிப்பில் உருவான வலிமை திரைப்படம் மற்றும் பாகுபலி வெற்றிக்கு பிறகு இராஜமௌலி இயக்கியுள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை சொல்லலாம்.
பல இன்னல்களுக்கு பிறகு, வலிமை திரைப்படம் ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட, இராஜமௌலி இயக்கியுள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் இரு திரைப்படங்களையுமே தள்ளிவைத்து விட்டது.
கொரோனாவின் ஆரம்ப காலத்தில் இருந்தே தமிழக திரையரங்குகள் பெரிய இன்னல்களை சந்தித்து வர, பெரிய திரைப்படங்கள் வெளியாகாமல் போவது, திரையரங்குகளை பெரிய பாதிப்பிற்கு உள்ளாக்கியிருக்கிறது.
இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் பல திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாவதற்கு தயாராகி வருகின்றன. தமிழகத்தில் திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே கொண்டு இயங்கி வந்தாலும், விரைவில் 100 சதவீத பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு அனுமதிக்கப்படுவர் என்று நம்பப்படுகிறது.
இராஜமௌலி இயக்கியுள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் வருகின்ற மார்ச் மாதம் 25 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் டான் திரைப்படமும் மார்ச் மாதம் 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டான் திரைப்படமும், ஆர்ஆர்ஆர் திரைப்படமும் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நடிகர் சூர்யா நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வருகின்ற மார்ச் மாதம் பத்தாம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
சூழல்கள் இப்படியாக இருக்க, வலிமை திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி சமூக வலைதளத்தை ஆட்டிப்படைக்க, இம்மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்துவிட்டன. இதனால் தமிழ் திரையுலகம் பெரிய ஆறுதலை சந்தித்துள்ளது.