ஈரோட்டில் குடும்ப தகராறு காரணமாக அண்ணன் -தம்பி இருவரையும் தாய்மாமன் கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டில் முனிசிபல் காலனியிலுள்ள கிருஷ்ணசாமி வீதியை சேர்ந்தவர் லோகநாதன். இவருக்கு கெளதம் (30), கார்த்தி (26) என்று இரு மகன்கள் இருந்தனர். இவர்களுள் கார்த்தி (26) ஈரோடு கிழக்கு சட்ட பேரவை தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் பொருளாளராக இருந்து வந்தார். மேலும் இவர்கள் செக்கு எண்ணெய், மலைத்தேன், மசாலா தூள் ஆகியவற்றை வாங்கி வீட்டிலேயே விற்பனை செய்து வந்தனர்.
இவர்களுக்கும் இவர்களின் தாய்மாமனான ஈரோடு மாணிக்கம் பாளையத்தை சேர்ந்த ஆறுமுகசாமிக்கும் குடும்ப தகராறு காரணமாக நீண்ட கால பேச்சு வார்த்தை இல்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக கெளதம், கார்த்தி இருவரும் ஆறுமுகசாமியை தொலைபேசியில் அழைத்து ஆவேசமான வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. இதைத்தொடர்ந்து ஆவேசமடைந்த ஆறுமுக சாமி அவர்களின் வீட்டிற்கு நேரில் வந்து வாக்குவாதம் செய்துள்ளார் .
இதனை கண்டு வீட்டை விட்டு வெளியில் வந்த அண்ணன் தம்பி இருவரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் கார்த்தி ஆறுமுக சாமி பேசுவதை தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்திருக்கிறார். இதைக்கண்டு மேலும் கோபம் கொண்ட ஆறுமுகசாமி அவர் மறைத்திருந்த கத்தியை எடுத்து இருவரையும் சரமாரியாக குத்தி விட்டு தலைமறைவானார்.
இதில் முகம், தலை, கை, கால் ஆகியவற்றிற்ல் குத்துப்பட்டு இரத்த வெள்ளத்தில் இருவரும் சரிந்து விழுந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் காரில் ஏற்றி சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையில் ஈடுபட்டனர். ஆனால் மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ஆறுமுகசாமியை வலை வீசி தீவிரமாக தேடி வருகின்றனர்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடக்கம்