Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்வன்னிய மக்களுக்கு உரிய உள் இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுக்காமல் நான் ஓய மாட்டேன் -...

    வன்னிய மக்களுக்கு உரிய உள் இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுக்காமல் நான் ஓய மாட்டேன் – ராமதாஸ் சூளுரை

    தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணை செல்லும் என்று உச்சநீதிமன்றம்  தீர்ப்பளித்திருக்கிறது. 

    இந்நிலையில் இதுக்குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ராமதாஸ், இத்தீர்ப்பு பெரிய ஏமாற்றம் அளிக்கிறது என்றார். மேலும், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு செல்லாது என்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் பட்டியலிட்டுள்ள காரணங்களை உச்சநீதிமன்றம் நிராகரித்து இருப்பது மனநிறைவளிக்கிறது என்றும் இட ஒதுக்கீடு விரைவில் சாத்தியமாகும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

    வன்னியர் உள் இட ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் அளித்துள்ள தீர்ப்பில், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும் கூட, அதையும் கடந்து பல சாதகமான அம்சங்கள் உள்ளதாக ராமதாஸ் தெரிவித்தார்.

    வன்னியர்களுக்கு எதிர்காலத்திலும் கூட இட ஒதுக்கீடு வழங்க முடியாதவாறு  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்படுத்தியிருந்த முட்டுக்கட்டைகள், உச்சநீதிமன்றத் தீர்ப்பில் அகற்றப்பட்டுள்ளன என்பதையும் அவர் விளக்கினார். 

    உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன்வைத்த வினாக்கள் 
    1. அரசியலமைப்புச் சட்டத்தில் 2018 ஆம் ஆண்டில் 102-ஆவது திருத்தமும், 2021-ஆம் ஆண்டில் 105-ஆவது திருத்தமும் செய்யப்பட்டதற்கு இடைப்பட்ட காலத்தில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அதிகாரம் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு உண்டா?
    2. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் ஓர் சட்டம் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அந்த அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யாமல் அந்தச் சட்டத்தை திருத்த முடியுமா? 
    3. அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள 338-பி பிரிவை புறக்கணித்து விட்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விவகாரத்தில் எந்தவித முடிவையும் எடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா?
    4. சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா?
    5. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வேலைவாய்ப்பு விகிதம், சமூக, கல்வி நிலைமை, மக்கள்தொகை ஆகியவை குறித்து கணக்கிடக்கூடிய அளவுக்கு புள்ளிவிவரங்கள் இல்லாத சூழலில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா?
    6. வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15, 16 ஆகிய பிரிவுகளை மீறியதா?
    7. எவ்விதமான நோக்கக் காரணங்களும் இல்லாமல் மக்கள்தொகை குறித்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மட்டும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மூன்று உட்பிரிவுகளாக பிரிக்க முடியுமா?

    ஆகிய ஏழு வினாக்களை எழுப்பி அவற்றின் அடிப்படையில் தான் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் ரத்து செய்தது என்று தெரிவித்தவர், உயர்நீதிமன்றம் கூறிய 7 காரணங்களில் ஐந்தாவது காரணம் தவிர மீதமுள்ள 6 காரணங்களை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது என்றார். 

    வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும்படி பரிந்துரைத்து வழங்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையிலும், கடிதத்திலும் சில நடைமுறைகள் பின்பற்றப்படாததைக் கூறிதான் வன்னியர்கள் இட ஒதுக்கீடு ரத்து செல்லும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது என்பதையும் தனது அறிக்கையில் அவர் தெரிவித்தார். 

    உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை உற்றுநோக்கினால்,  தெளிவான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான பரிந்துரை அறிக்கையை தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து தமிழ்நாடு அரசு பெற்று, அதன்மூலம் புதிதாக சட்டம் இயற்றி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பது தெரிகிறது. அந்த வகையில் இது சாதகமானதே என்று ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

    உச்சநீதிமன்ற தீர்ப்பின் அம்சங்கள்
    • மாநில அரசுக்கு உள் ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உண்டு.
    • மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள சாதிகளை  பல்வேறு பிரிவுகளாக பிரித்து இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை.
    • ஒரு சாதிக்கு மட்டும் தனியாக இட ஒதுக்கீடு வழங்கலாம்.
    •  குடியரசுத் தலைவரின் ஒப்புதல்கள் வன்னியர் உள் ஒதுக்கீட்டு சட்டத்திற்கு தேவையில்லை.
    • வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக  இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 9-ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள 69% இட ஒதுக்கீடு சட்டத்தை திருத்தத் தேவையில்லை.
    • வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது அல்ல.

    இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் உரிய நடைமுறைகளை பின்பற்றி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு  வழங்க முடியும். தமிழக அரசு அதை நிச்சயம் செய்யும் என்ற திடமான நம்பிக்கையும் எனக்கு உண்டு என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.

    சமூகநீதியை வென்றெடுப்பது என்பது இன்று மழை பெய்தால் நாளை செடி முளைப்பது போன்றதல்ல எனவும் கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு தான் சமூகநீதியை வென்றெடுக்க முடியும் என்ற அடிப்படை உண்மை எனக்குத் தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    வன்னியர்களுக்கு சமூகநீதியை வென்றெடுப்பதற்காக 1980-ஆம் ஆண்டில் தொடங்கிய போராட்டம் இன்று வரை ஓயவில்லை எனவும் 1980-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 10 ஆண்டுகள் போராட்டம் நடத்தி, 21 இன்னுயிர்களை பலி கொடுத்து தான் மிகவும்  பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான  20% இட ஒதுக்கீட்டை வென்றெடுத்தோம் என்றும் தெரவித்த ராமதாஸ், நமது சமூகநீதிப் போர் இன்னும் ஓயவில்லை என்றும் தெரிவித்தார்.

    ராமதாஸ் அவர்கள் வன்னிய மக்களுக்கு உரிய உள் இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுக்காமல் நான் ஓய மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். 

    உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு தமிழ்நாட்டின் சமூகநீதிச் சூழல் தெளிவாகியிருக்கிறது. ஆகவே தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையை பெற்று வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று ராமதாஸ் தெரிவித்தார்.

    அதற்கான நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். உடனடியாக மீண்டும் வன்னியர்கள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றுவதற்காக தமிழக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்று ராமதாஸ் தன் அறிக்கையில் தெரிவித்தார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....