மத்திய அரசு அமல்படுத்தத் துடிக்கும் கொள்கைகளைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தால் தமிழ்நாட்டில் போக்குவரத்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இராமதாஸ் அறிக்கை
வேலை நிறுத்தப் போராட்டத்தால் மக்களும், மாணவர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், அதைப் போக்க தமிழக அரசும், போக்குவரத்துத் துறையும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது கடமை தவறிய செயல் ஆகும் என்று ராமதாஸ் அவர்கள் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் ஆளும் திமுக கட்சியும் இடதுசாரி இயக்கங்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளதை அவர் குறிப்பிட்டார்.
இந்த வேலை நிறுத்தத்திற்காக முன்வைக்கப்படும் அத்தனை கோரிக்கைகளும் நியாயமானவை என்றும், இக்கோரிக்கைகளுக்காக பல்வேறு காலகட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சி ஏராளமான போராட்டங்களை நடத்தியுள்ளது என்றும், அதேநேரத்தில் இத்தகைய போராட்டங்களால் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில் பா.ம.க.வுக்கு உடன்பாடு இல்லை என்றும் ராமதாஸ் அவர்கள் தெரிவித்தார்.
வழக்கமாக வேலைநிறுத்தப் போராட்டங்களின் போது வங்கிச் சேவைகள் மட்டுமே பாதிக்கப்படும். ஆனால், இம்முறை ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றிருப்பதால் தமிழகத்தை பொறுத்தவரையில் போக்குவரத்துச் சேவை முற்றிலுமாக முடங்கியிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
கள நிலைமை
தமிழ்நாட்டில் கள நிலைமையை பொறுத்தமட்டில் பத்து விழுக்காடு பேருந்துகள் கூட இயக்கப்படாத சூழலால் அலுவலகங்களுக்குச் செல்பவர்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர் பேருந்து நிறுத்தங்களில் காலை பத்து மணியைக் கடந்தும் காத்துக் கொண்டிருப்பதை காண முடிகிறது.
சென்னையில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்தவர்கள், தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலும், தாம்பரம் மற்றும் பெருங்குளத்தூரிலும் அதிகாலை முதல் காத்துக் கிடக்கின்றனர்.
ஆட்டோக்கள் இயக்கப்படாத நிலையில், இயங்கும் ஒரு சில ஆட்டோக்களில் கட்டணம் அதிகமாக உள்ளது என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.
அரசின் கொள்கைகளை எதிர்த்தோ, தங்களின் உரிமைகளைக் கோரியோ போராட தொழிற்சங்கங்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு என்றும் அதேநேரத்தில் அத்தகைய போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உண்டு என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.
அவதிக்கு காரணம் யார்?
அந்தக் கடமையை செய்வதில் தமிழக அரசு தவறி விட்டது. ஒருபுறம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோருக்கு ஊதியம் பிடித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்திருந்தது. மற்றொருபுறம் இந்த வேலை நிறுத்தத்திற்கு திமுக ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்திருந்தது. இவ்வாறாக அரசு உறுதியாக இல்லாதது தான் மக்களின் அவதிக்கு காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க தமிழக அரசு நினைத்திருந்தால், செய்து இருக்கலாம் என்றும் வழக்கமாக வேலைநிறுத்தங்கள் அறிவிக்கப்படும் போது உயர் அதிகாரிகள் பணிமனைகளில் முகாமிட்டு பேருந்துகளின் இயக்கத்தை உறுதி செய்வார்கள். ஆனால், இம்முறை ஆளுங்கட்சி தொழிற்சங்கமே போராடுவதால் அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையும் தெரியப்படுத்தினார், ராமதாஸ்.
வேலைநிறுத்தத்தில் பங்கேற்காத சில தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தாங்களாக முன்வந்து கூடுதல் நேரம் பணி செய்வதாக கூறிய போதிலும் அதையும் அதிகாரிகள் ஏற்கவில்லை. இதன்படி பார்த்தால் மக்களின் அவதிக்கு ஆளும் அரசும் மறைமுக காரணம் என்பதை மறுக்க முடியாது என்றும் ராமதாஸ் அவர்கள் தெரிவித்தார்.
பள்ளிகளுக்கே பெரும்பான்மையான மாணவர்களால் செல்ல முடியாத நிலையில் தமிழ்நாட்டில் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாவது திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுவது குறித்தும் ராமதாஸ் பேசினார். வேலைநிறுத்தத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அரசு இருந்தால், தேர்வுகளை ஒத்திவைத்து விட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்திருந்திருக்கலாம்.
பொதுமக்களும், மாணவர்களும் பெரும் அவதிக்கு உள்ளாக நேர்ந்திருக்க காரணமாக தமிழக அரசின் வெற்றியை விட தொழிற்சங்கத்தின் வெற்றியையே ஆட்சியாளர்கள் முக்கியமாக கருதியதுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது முற்றிலும் தவறு என்றும் கண்டித்துள்ளார், ராமதாஸ்.
தமிழக அரசு அதன் கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியச் சேவைகளும் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பேருந்து சேவையை மேம்படுத்த வேண்டும் என்றும் திருப்புதல் தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் ராமதாஸ் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.