எத்தனை அரசுகள் மாறினாலும், எத்தனை வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டாலும், உலக நாடுகள் கண்டித்தாலும், மீண்டும் மீண்டும் தமிழக மீனவர்களுக்கு அரங்கேறும் தொடர் இன்னல்கள் சற்றும் குறைந்தப்பாடில்லை.
ஆளும் அரசுகள் சொற்களில் மட்டுமே நாங்கள் தமிழக மீனவர்களுக்காக இருக்கிறோம் என்பதை உபயோகம் செய்கின்றனர். செயலில் அவர்கள் கூறிய ‘நாங்கள் தமிழக மீனவர்களுக்காக இருக்கிறோம்’ என்ற சொல்லாடலை தேட வேண்டியிருக்கிறது.
இந்நிலையில், வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை அவர்களின் படகுகளுடன் சிங்களப்படை கைது செய்திருக்கிறது. இதற்கு கண்டனம் தெரிவித்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் ராமதாஸ் பின்வருவனவற்றை தெரிவித்தார்.
சிங்களக் கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது; இதை இனியும் இந்திய அரசு அனுமதிக்கக்கூடாது என்றார்.
மேலும், ஜனவரி 31ஆம் தேதி 21 பேர், பிப்ரவரி 8-ஆம் தேதி 11 பேர், இன்று 12 பேர் என கடந்த இரு வாரங்களில் மட்டும் மொத்தம் 3 முறை 44 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை நினைவு கூர்ந்த ராமதாஸ், இந்தியாவிடம் உதவி பெறும் இலங்கை, இந்திய இறையாண்மை மீது தொடர் தாக்குதல் நடத்துவதை வேடிக்கை பார்க்கக்கூடாது என்று கூறினார்.
இன்று கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் உட்பட இதுவரை கைது செய்யப்பட்ட 44 மீனவர்களையும், அவர்களின் படகுகளுடன் உடனடியாக விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் த்தினார்.