ராகுல்காந்தி பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ வெளியாகி தற்போது வைரல் ஆகி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி, பிரதமர் மோடியையும், பா.ஜ.க. தலைமையிலான அரசையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் ஐரோப்பிய சுற்றுபயணத்தையும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ஏற்கனவே, நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி, பஞ்சாப் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் படுதோல்வி என அடுத்தடுத்து தோல்விகளில் சிக்கி உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தலைமை கடும் நெருக்கடியில் உள்ளது.
கட்சியை மீட்டெடுக்க பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தான் காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதில்லை என வெளிப்படையாகவே அறிவித்தார். இது மேலும் காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.
இந்நிலையில் தான், வெளிநாட்டில் ராகுல் காந்தி ஒரு இரவு நேர பார்ட்டியில் கலந்து கொண்ட வீடியோவை பா.ஜ.க. தலைவர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து அவரை கடுமையாக தாக்கி வருகின்றனர். அந்த வீடியோவில் ஒரு பெண்ணுடன் ராகுல் காந்தி பார்ட்டியில் கலந்து கொண்டது தெரிகிறது. நேபாளத்தின் தலைநகர் காத்மண்டில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் தரப்பினர், தனது பத்திரிகையாளர் நண்பரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நேபாளுக்கு ராகுல் காந்தி சென்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தலைநகர் காத்மாண்டுவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் திருமணம் முடிந்ததும் அங்கு பிரம்மாண்ட பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பார்ட்டியில் ராகுல் காந்தி கலந்து கொண்டிருக்கிறார்.
அவர் பார்ட்டியில் இருக்கும் வீடியோவை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒரு பெண்ணுடன் ராகுல் பேசிக் கொண்டிருப்பதை காண முடிகிறது. வெறும் 12 நொடிகள் மட்டுமே இந்த வீடியோ உள்ளது.
பாஜகவின் கருத்துகள் :
இந்த வீடியோ சம்மந்தமாக, பா.ஜ.க.வின் ஷெசாத் பூனவல்லா டிவிட்டரில், ராஜஸ்தான் எரிகிறது ஆனால் ராகுல் காந்தி தனது சொந்த கட்சியை விட பார்ட்டியை விரும்புகிறார். அவர் இந்தியாவில் பல்வேறு நெருக்கடிகளை பற்றி ட்விட் செய்கிறார். ஆனால், பாரத் கே லாக்கை விட மதுக்கடைகளை விரும்புகிறார். ராகுல் காந்தி பார்ட் டைம் அரசியல்வாதி கூட இல்லை, பார்ட்டி நேர அரசியல்வாதி. இது முதல் முறையல்ல என்று பதிவு செய்து உள்ளார்.
மேலும் இதுகுறித்து பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா கூறும்போது, “காங்கிரஸ் கட்சி மிகவும் பரிதாபத்துக்குரியதாக இருக்கும் சமயத்தில் அதன் முக்கிய தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டு பார்ட்டில் பங்கேற்றிருக்கிறார். காங்கிரஸ் தனது தலைமை பதவியை யாருக்கும் விட்டுக்கொடுக்காத சூழலில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் பதவிக்கு போட்டி ஏற்பட்டுள்ளது” என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்று பாஜக மூத்த தலைவர் சி.டி.ரவி அவர்களும் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். ராகுல் காந்தி பார்ட்டியில் கலந்து கொள்வதால் இந்தியர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக அதுதான் அவரது முக்கிய வேலை. ஆனால், அவர் யாருடன் பார்ட்டி நடத்துகிறார்? அவர் ஒரு சீன பெண் போல் தெரிகிறார். இந்தியாவுக்கு எதிராக சீனாவுடன் சேர்ந்து ஏதாவது பெரிய திட்டம் தீட்டுகிறாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
சமையல் எண்ணெய் விலை உயரப்போகிறதா? மக்களே உஷார்!