நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி, கடந்த 8 ஆண்டுகளாக நடைபெறுகிறது. இவரது ஆட்சியில், பண மதிப்பிழப்பு, சிலிண்டர் விலை உயர்வு உள்பட சில நடவடிக்கைகளால், மக்கள் துயரப்பட்டுள்ளனர்.
ஆனால், அனைவருக்கும் ஆதார் கார்டு வழங்கியது, இந்த ஆட்சியின் சாதனையாகும. பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களால், அண்டை நாடுகள் நட்புறவோடு இருந்து வருகிறது. இந்நிலையில், நாட்டை எப்படியெல்லாம் சீரழிக்கலாம் என்று, பாஜக-வைச் சேர்ந்த நரேந்திர மோடியின் 8 ஆண்டு கால ஆட்சி பாடம் கற்பித்துள்ளதாக, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
நாடு முழுவதிலும் நிகழும் கொரோனா வைரஸ் பரவல், வேலையில்லாத் திண்டாட்டம், சிலிண்டர் விலையேற்றம், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் நிலக்கரிப் பற்றாக்குறையால் நிகழும் மின்வெட்டு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி, பிரதமர் நரேந்திர மோடி அரசை, அடிக்கடி விமர்சித்து வருகிறார் ராகுல் காந்தி.
ஏற்கனவே, வேலையில்லா திண்டாட்டத்தை நிவர்த்தி செய்து, பட்டதாரிகளின் கனவை நனவாக்கும் சரியான நேரம் இதுவே என, ராகுல் காந்தி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சில காலமாக வேலையின்மை, பணவீக்கம், மத நல்லிணக்கம், கொரோனாவால் பொருளாதார வீழ்ச்சி போன்றவைகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடியையும், அவரது தலைமையிலான மத்திய அரசையும் ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார்.
கோடைகாலம் தொடங்கிய பிறகு, அதிகரித்துள்ள வெப்ப அலைகளால், மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளது. அனல்மின் நிலையங்களில் உற்பத்தி பாதிப்பு மற்றும் நிலக்கரிப் பற்றாக்குறை போன்ற காரணங்களால், மின்சார உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாக, பல மாநிலங்களில் மின்வெட்டுப் பிரச்சனை, மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தமிழகத்திலும், மின்வெட்டுப் பிரச்சனையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.
இந்நிலையில், ராகுல் காந்தி ட்விட்டரில், மோடி அரசை விமர்சித்து பதிவு ஒன்றை ட்வீட் செய்துள்ளார். நம் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார சீர்குலைவு, விவசாயிகள் போராட்டம், மின்வெட்டுப் பிரச்சனை மற்றும் பணவீக்கம் அதிகரிப்பு போன்றவை மிகப்பெரிய பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 8 ஆண்டு கால ஆட்சியின் தவறான நிர்வாகம், நாட்டை எப்படியெல்லாம் சீரழிக்கலாம் என்பதை நமக்கு பாடம் கற்பித்துள்ளது.
ஒரு காலத்தில், பொருளாதார வளர்ச்சியில் அதிவேகமாக வளர்ந்து கொண்டிருந்த நம் நாடு, சீரழிய மோடி அரசு தான் முக்கிய காரணம் என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.