இந்தியா முழுவதும் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை, ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைத் தடுக்க பலவித நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்தாலும், வேலையில்லா இளைஞர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை.
வேலை கிடைக்காத விரக்தியில், சில பட்டதாரிகள் கிடைத்த வேலையைச் செய்து, வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். மனதுக்கு திருப்தியான வேலை செய்பவர்கள் இங்கு வெகு சிலரே. இந்நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று அவ்வப்போது குரல் கொடுத்து கொண்டு தான் இருக்கிறார்களே தவிர, அதற்கு தீர்வு இன்றளவும் கிடைக்கப் பெறவில்லை.
வேலையின்மையை ஒழிக்க, பட்டதாரிகளை தொழில் முனைவோராக்கும் பல சிறப்பத் திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், இது பற்றிய போதிய விழிப்புணர்வு, இன்றைய இளம் தலைமுறையினர் இடையே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் மீது தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அந்த வகையில், இந்தியாவை விட்டு பல தொழிற்சாலைகள், நிறுவனங்கள் சென்று விட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். வேலையில்லா திண்டாட்டத்தை சரி செய்து, பட்டதாரிகளின் கனவை நனவாக்கும் தருணம் இது எனவும் அவர் தெரிவித்துள்ளார். சமீப காலமாக வேலையிழப்பு, பணவீக்கம், மத நல்லிணக்கம், பொருளாதார வீழ்ச்சி போன்றவைகள் குறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும், அவரது தலைமையில் செயல்படும் மத்திய அரசையும் ராகுல் காந்தி விமர்சித்து வந்தார்.
தற்போது நம் நாட்டில் நிலவும் மிக முக்கியப் பிரச்சினையான வேலையில்லா திண்டாட்டம் பற்றிய கருத்துகளை ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வேலையின்மையை சரி செய்ய வேண்டும் என பிரதமர் மோடியை அவர் வலியுறுத்தியுள்ளார்.
7 உலக அளவிலான பிராண்டுகள், 9 பெரிய தொழிற்சாலைகள், 649 டீலர்ஷிப்புகள், 84,000 வேலை வாய்ப்புகள், இவை அனைத்துமே மிக எளிதாக நம் நாட்டை விட்டு வெளியேறி விட்டது. பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, இந்தியாவில் உற்பத்தியும், வெறுப்பும் ஒரே நேரத்தில் இருந்து விட முடியாது. வேலையில்லா திண்டாட்டத்தை சரி செய்ய வேண்டிய சரியான தருணம் இதுவென ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மனிதனுக்கும் பறவைக் காய்ச்சலா? சீனாவில் நிகழும் சம்பவம்; பதற்றத்தில் மக்கள்!