பிரக்ஞானந்தா எனும் சிறுவனைக்கண்டு இன்று இந்தியா மட்டும் அல்ல உலகமே வியந்துக்கொண்டிருக்கிறது. தமிழகத்தின் முதலமைச்சரில் தொடங்கி கடைக்கோடி சாமானியன் வரை இன்று வியக்கும் வகையில் பேசிக்கொண்டிருக்கும் பிரக்ஞானந்தாவிற்கு 16 வயது. இவர் சென்னையை சேர்ந்தவர். சாதாரண நடுத்தரக்குடும்பத்தில் பிறந்தவர். பிரக்ஞானந்தாவின் தந்தை போலியாவால் பாதிக்கப்பட்டவர். அதே சமயம் கூட்டுறவு வங்கியில் பணிப்புரிந்து வருகிறார். முதுகெலும்பாய் இருக்கும் பிரக்ஞானந்தாவின் தாயார் பெயர், நாகலட்சுமி.
சிறிய வயது முதலே சதுரங்கப் போட்டியில் ஆர்வம் கொண்டவராக இருந்தவர், பிரக்ஞானந்தாவின் அக்கா வைஷாலி. அக்கா சதுரங்கப் போட்டி விளையாட அக்காவை வெல்வதற்காக சதுரங்க விளையாட்டை விளையாட ஆரம்பித்தவர், படிப்படியாய் வளர்ந்து தனது 7 வயதில் FIDE மாஸ்டர் பட்டம் வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
மேலும், 2013 ஆம் ஆண்டு எட்டு வயதுக்குட்ப்பட்டோருக்கான உலக இளம் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றார். 2015 ஆம் ஆண்டு 10 வயதுக்குட்பட்டோருக்கான உலக இளம் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றார். அதனை தொடர்ந்து 2016ல் உலகின் யங் இன்டெர்நேஷ்னல் மாஸ்டர் என்ற பட்டத்தையும் வென்று அனைவரையும் தொடர்ந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
வெற்றியின் கனியை பறித்த பிரக்ஞானந்தா தனது சதுரங்க விளையாட்டில் அடுத்தக்கட்டத்திற்கு முன்னேற நினைத்தார். அதனின் நோக்கமாய் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல வேண்டும் என்ற துடிப்பை தன்னுள் பொறுத்திக்கொண்டார், பிரக்ஞானந்தா.
உள்ளுக்குள் இருந்த துடிப்புக்கு முயற்சிகளின் மூலம் பிரக்ஞானந்தா ஊக்கம் அளிக்க கிராண்ட் மாஸ்டர் பட்டத்திற்கான தகுதி சுற்றுகளில் வெற்றி பெற்று, FIDE ரேட்டிங் பெற்றார். இதன் மூலம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பிரக்ஞானந்தா தனது பன்னிரண்டு வயதில் வென்றார். இப்பட்டத்தை வென்றதன் மூலம் உலகளவில் பதின் பருவம் எட்டுவதற்குள் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற இரண்டாவது வீரர் என்ற சாதனைக்கும் பிரக்ஞானந்தா சொந்தமானார்.
தற்போதோ, பிரக்ஞானந்தா மற்றுமொரு சாதனையை நிகழ்த்தி இந்தியாவையே பெருமைப்பட வைத்துள்ளார். ஆம்! ஏர்திங்ஸ் மாஸ்டர் எனப்படும் சதுரங்க விளையாட்டுப் போட்டித் தொடர் காணொளி காட்சிகள் மூலம் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் மொத்தம் 16 வீரர்கள் பங்கேற்றனர்.
இப்போட்டியின் எட்டாவது சுற்றில் தலைச்சிறந்த சதுரங்க விளையாட்டு வீரரும், உலக அளவில் சதுரங்க விளையாட்டு வீரர்களின் வரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான கார்ல்சனை பிரக்ஞானந்தா எதிர்க்கொண்டார். மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளான இப்போட்டியில் பிரக்ஞானந்தா கார்ல்சன் அவர்களை 39 நகர்வுகளில் தோற்கடித்து வெற்றி பெற்றார். இந்த வெற்றி உலகெங்கிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏர்திங்ஸ் மாஸ்டர் சதுரங்க விளையாட்டுப் போட்டித் தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்த பிரக்ஞானந்தா, மொத்தம் 8 புள்ளிகளுடன் 12ஆவது இடத்தில் உள்ளார்.
பிரக்ஞானந்தாவின் இந்த வெற்றிக்கு இந்தியர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் பரவியுள்ள சதுரங்க விளையாட்டு வீரர்கள், சதுரங்க விளையாட்டைப் பற்றி அறிந்தவர்கள் என அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.