தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜூன் புகையிலைத் தொடர்பான விளம்பரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்த நிகழ்வு மீப்பெரும் வரவேற்பை அவரது ரசிகர்களின் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெற்று வருகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் முன்னணி நடிகர்கள் பலர் புகையிலைச் சார்ந்த விளம்பரங்களில் நடித்து வருவதை நாம் காண முடிகிறது. இப்படியான சூழலில் அல்லு அர்ஜூன் எடுத்துள்ள இம்முடிவு பெரும் நன்மதிப்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிந்துள்ளார்.
அப்பதிவில், புகையிலை நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க பெருந்தொகையை ஊதியமாகத் தருவதாக ஆசை காட்டப்பட்ட போதிலும், சமூகக் கேடுகளை விளைவிக்கும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் அல்லு அர்ஜுன் மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.
புகையிலை நிறுவன விளம்பரங்களில் தாம் நடித்தால், அதன் மூலம் உந்தப்பட்டு தமது ரசிகர்கள் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடும் என்பதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன என்பதை சுட்டிக்காட்டிய அன்புமணி ராமதாஸ், அவரது சமூக அக்கறை பாராட்டத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் புகை பிடிக்கும் காட்சிகளில் நடித்தால், அதைப் பார்த்து ரசிகர்கள் புகையிலைக்கு அடிமையாவார்கள் என்பதால் தான் அத்தகைய காட்சிகளில் நடிப்பதை தவிர்க்கும்படி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது முன்னணி நடிகர்களுக்கு தான் கடிதம் எழுதியதையும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
புகையிலை நிறுவன விளம்பரத்தில் நடிக்க மறுத்த நடிகர் அல்லு அர்ஜுன் திரைப்படங்களிலும் புகைக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும். அனைத்து நடிகர்களும் அவர்களின் ரசிகர்கள் உள்ளிட்ட மக்கள் நலன் கருதி புகைக்கும் காட்சிகளைத் தவிர்க்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் தனது பதிவின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.
விஜய் நடிப்பில் வெளிவந்த சர்கார் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், விஜய் அவர்கள் புகைப்பிடிப்பது போன்ற புகைப்படம் இடம்பெற, அப்போது அதை அன்புமணி ராமதாஸ் அவர்கள் கண்டித்தது பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; மீண்டும் இந்தியாவுக்கு புகழாரம் சூட்டிய முன்னாள் பிரதமர்- என்ன சொன்னார் தெரியுமா?