தமிழகத்தில் நாளுக்கு நாள் ஆன்லைன் சூதாட்டடமானது பெருகிக்கொண்டே செல்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளின் அளவானது கந்துவட்டி விகிதத்தில் உயர்ந்துக்கொண்டிருக்கிறது. உயிர் இழப்புகள், கொள்ளையடிப்புகள் என பல இன்னல்களுக்கு காரணமாய் ஆன்லைன் சூதாட்டடமானது விளங்கி வருகிறது.
கடந்தவாரத்தில் கூட வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கூடல் நகரில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர் அவரது வீட்டின் பின்புறம் அடித்து கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி பரவலாய் தமிழகத்தை உலுக்கியது.
இந்நிலையில், சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த உணவக ஊழியர் காந்திராஜன் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளி ஆனதை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கும் செய்தி மீண்டும் பலரையும் அச்சுறுத்தி வருகிறது.
அவ்வபோது, ஆன்லைன் சூதாட்டடத்தை ஒழிக்க கோரி குரல் கொடுத்துவரும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும் தலைவருமான ராமதாஸ் அவர்கள், ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் கவலை அளிக்கின்றன என தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்கு முன் கடலூர் மாவட்டத்தில் ஆன்லைன் ரம்மி ஆட ஒரு மாணவர் மூதாட்டியை கொன்று கொள்ளையடித்தார்; குடியாத்தம் அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தவர் அடித்துக் கொல்லப்பட்டார் எனவும், கடந்த ஒரு வாரத்தில் ஆன்லைன் சூதாட்டத்தினால் பறிபோன மூன்றாவது உயிர் இது என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டம் உடனடியாக தடை செய்யப்படாவிட்டால், அதில் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்வது தினசரி நிகழ்வாகி விடும் என்று எச்சரித்த ராமதாஸ், உச்சநீதிமன்ற மேல்முறையீட்டை காரணம் காட்டி ஆன்லைன் சூதாட்ட உயிரிழப்புகளை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறதா என்ற கேள்வியையும் எழுப்பினார்.
“மதுவும், லாட்டரி சீட்டும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களை எவ்வாறு சீரழித்தனவோ, அதை விட மோசமான சீரழிவுகளை ஆன்லைன் சூதாட்டங்கள் ஏற்படுத்துகின்றன. அதனால், இனியும் தாமதிக்காமல் திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க ; ‘பாசமுள்ள பிள்ளைகளே….’ – பீஸ்ட் குறித்து பேசிய தளபதி விஜய்யின் தந்தை!