பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறிய வண்ணம்தான் உள்ளது மனித இனத்துக்கே இழுக்காகத்தான் பார்க்கப்படுகிறது. அப்படியான இழுக்கான செயல் ஒன்றுதான் விருதுநகரில் அரங்கேறியுள்ளது. விருதுநகரின் மேலத் தெருவைச் சேர்ந்தவர் ஹரிஹரன், இவருக்கு வயது 27. இவர் தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றிய 22 வயது இளம்பெண் ஒருவரும் காதலித்துள்ளனர்.
பின்னர், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஹரிஹரன் அந்நிகழ்வை படம்பிடித்து மிரட்டியுள்ளார். மேலும், அக்காணொளியை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என பயமுறுத்தி ஹரிஹரனின் நண்பர்களான 27 வயதான ஜூனத் அகமது, 21 வயதான ஓட்டுநர் பிரவீன் மற்றும் 9-ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் நான்கு மாணவர்கள், ஹரிஹரன் காதலித்த இளம்பெண்ணிடம் பலமுறை பாலியல் வன்கொடுமையை நிகழ்த்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் உதவிக்காக மாடசாமி என்பவரை நாட அவரும் அந்த காணொளியை அவரது செல்போனுக்கு அனுப்பச் சொல்லி, அவரும் இளம் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஒரு கட்டத்தில் காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளிக்க, அப்புகாரின் பேரில் திமுகவை சேர்ந்த இருவர், நான்கு பள்ளி செல்லும் சிறுவர்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிகழ்வு தற்போது தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது.
இப்படியான சூழலில் ’’விருதுநகரில் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றிய இளம் பெண்ணை மிரட்டி மாணவர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 8 பேர் தொடர்ந்து 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்று வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன’’ என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், இளம்பெண்ணை சீரழித்த கொடியவர்களை காவல்துறையினர் கைது செய்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால், இந்த நடவடிக்கைகள் போதுமானவை அல்ல என்றார். மனிதநேயமின்றி, மிருகங்களைப் போன்று செயல்பட்ட அனைவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
“விருதுநகர் பெண்ணை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த ஒருவர், அதை படம் பிடித்து மிரட்டி தான் தொடர் கொடூரத்தை நிகழ்த்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் ஒருவரிடம் நீதி கேட்டு சென்ற போது அவரும் இதே குற்றத்தை செய்துள்ளார்” என்று கொதித்தவர் இவர்களை மன்னிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு, தங்களின் விவரங்கள் வெளியில் வராமல் காவல்துறையை அணுகி நீதி பெறுவது குறித்த விழிப்புணர்வு இல்லாதது தான் அவர்கள் மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட காரணம் என்றவர் இது குறித்த பொது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.