நூறு நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை ஒரே மாதிரியாக இருந்த நிலையில், கடந்த ஒன்பது நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஐந்து நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. இத்தொடர் விலை உயர்வு மக்களை பெரிதும் பாதித்து வருகிறது.
இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகளும், டீசல் லிட்டருக்கு 76 காசுகளும் உயர்ந்துள்ளது. ஏற்கனவே கடந்த ஒன்பது நாட்களில் பெட்ரோல் விலை ரூ.5.29 ஆகவும், டீசல் விலை ரூ.5.33 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
விலை உயர்வுகளால், இன்று பெட்ரோல் 106.69 ரூபாய்க்கும், டீசல் 96.76க்கு ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலை நீடிக்கவும் அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. தொடர் விலை உயர்வு நீடிக்குமாயின் சமானிய மக்கள் பெரும் இன்னல்களை சந்திப்பர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
கச்சா எண்ணெய்
எரிபொருளின் ஆதாரமாக விளங்கும் கச்சா எண்ணெயின் விலைகள்தான் பெட்ரோல் டீசல் முதலானவற்றின் விலையை நிர்ணயிக்கின்றன.
கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை வைத்துதான் எரிபொருளின் விலைகளில் ஏற்றமும் இறக்கமும் காணப்படும்.
ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. மேலும், போரினால் விலை நிலவரங்கள் தொடர்ந்து மாறுதலுக்கு உள்ளாகின. இதனால் உலக அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தன.
தற்போது, தொடர்ந்து உயர்ந்த கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்நிலையில், உள்நாட்டு சந்தையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்னும் நிலையான மதிப்பை எட்டவில்லை என்றும், கச்சா எண்ணெய் விலை தொடர் மாறுதலுக்கு உட்பட்டு வருவதால், இந்த விலையேற்றம் என்றும், எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
நிர்மலா சீதாராமன்
விலையேற்றம் குறித்து இந்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், கச்சா எண்ணெய் விநியோகத்தில் தடங்கல், போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை கடந்த இரண்டு வாரங்களாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது என்றும் அதனால்தான் கடந்த எட்டு நாட்களாக இந்தியாவில் விலை உயர்வு காணப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
எரிபொருளின் விலைகள் உயர்ந்தால், அடிப்படை பொருட்களின் விலையும் உயரும் என்பதால் மக்கள் அவதியில் உள்ளனர்.