மகளிர் பல்கலைக்கழக வளாகத்தில் எந்தவித ஸ்மார்ட் ஃபோன்களுக்கும் அனுமதி இல்லை என பாகிஸ்தானின் வடமேற்கு பகுதிகளில் உள்ள பல்கலைக்கழங்கள் தெரிவித்துள்ளன.
பல்கலைக்கழக நேரங்களில் மாணவர்கள் ஸ்மார்ட் போன்களை அதிகம் பயன்படுத்தி வருவதால் அவர்களின் கல்வி மற்றும் செயல்திறன் பாதிக்கப்படுகின்றது. அதனால் பல்கலைக்கழக வளாகங்களில் ஸ்மார்ட் ஃபோன்கள், டச் ஸ்க்ரீன் கொண்ட எந்த ஒரு மின்னணு பொருளையும் பயன்படுத்த கூடாது என்று பல்கலைக்கழகங்கள் உத்தரவிட்டுள்ளன. இருப்பினும், இதற்கு பல்வேறு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
இதனை, மீறும் மாணவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மீறுவோருக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாமல், தாலிபான்கள் ஆதிக்கம் அதிக உள்ள மாகாணங்களில் பெண்கள், அதிக மேக் அப் மற்றும் முடிகளுக்கு வண்ணம் தீட்டுவது போன்ற செயல்களுக்கு அதிகமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பெண்கள், சல்வார் மற்றும் கமீஸ் மட்டுமே அணிய வேண்டும் என்றும் விலையுர்ந்த ஆடை ஆபரணங்கள் பொருள்கள் என எதுவும் பல்கலைக்கழகத்திற்கு அணிந்து வரவோ எடுத்து வரவோ கூடாது என்று உத்தரவுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த மாதமே, பெஷாவர் பல்கலைக்கழகம் பெண்கள் தங்களுக்கு விருப்பமான வெள்ளை சல்வாரும் கமீசும் அணியலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. மேலும் ஆண்கள் அடக்கமான ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஆண்கள், கிழக்கு மற்றும் மேற்கத்திய உடைகளை அணிந்துக் கொள்ளலாம் எனவும் அவற்றில் கிழிந்த மற்றும் உடம்பில் மிகவும் ஒட்டிய ஜீன்ஸ் போன்ற உடைகளையும் ஷார்ட்ஸ், காதணிகள், சாதரண காலணிகள் அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்கள், தங்கள் முடிகளை சாதாரணமான முறையில் வெட்டவும் தாடி வளர்ப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.