நேற்று தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை வாசிப்பின் போது அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். திமுக அரசும் ஸ்டாலினும் தான் அதிமுக அமைச்சர்கள் கைது செய்யக் காரணம் என்று முழக்கங்கள் எழுப்பி வெளிநடப்பு செய்தனர்.
அப்போது, செய்தியாளர் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் இணை ஒருகிணைப்பாளருமான இ பி எஸ், திமுக அரசின் நிதிநிலை அறிக்கையில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது எனவும், திமுக தேர்தல் வாக்குறுதிகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை எனவும், திமுக முன்பு ஆட்சியில் இருந்தபோது அதிக கடனை வாங்கியதாகவும் குற்றம் சாற்றினார். மேலும் அவர், நீட் தேர்வு ரத்து செய்வது தான் முதல் வாக்குறுதியாக இருந்தது. ஆனால் அதை இன்னும் நிறைவேற்றவில்லை என்று விமர்சனம் செய்தார்.
மேலும் இதுவரை திமுக என்ன செய்தது என்றும், உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் முறைகேடு சனநாயக படுகொலை என்றும் தெரிவித்த அவர், கொரோனா நிலை இயல்புக்கு திரும்பியும் கடன் சுமை குறையவில்லை என்றும் கூறினார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ பி எஸ் கூறிய அறிக்கையில்,
திமுக அரசின் நிதிநிலை அறிக்கை மக்களுக்கு துரோகம் இழைத்திருப்பதைப் படம் பிடித்துக் காட்டியிருப்பதாக கூறினார். மேலும், ஏழை எளிய மக்களின் எதிர்ப்பார்ப்புகளை இந்த நிதிநிலை அறிக்கை பூர்த்தி செய்யவில்லை என்றும் திமுக அளித்த வாக்குறுதிகள் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறாதது மக்களை வஞ்சிக்கும் செயல் எனவும் கூறினார். மேலும் அவர் வருவாய்களைப் பெருக்குவதற்கான வழிமுறைகளும் செலவினங்களை கட்டுப்படுத்துவதற்கான நெறிமுறைகளும் உருவாக்கப்பட்டதாக தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் மாநில கல்விக் கொள்கை குழு அமைக்க சென்ற ஆண்டு கூறியதாகவும் அது இந்த ஆண்டில் இடம்பெறவில்லை என்றும் இந்த நிதிநிலை அறிக்கை இலக்கற்றும் எதிர்காலம் குறித்து எந்த தீர்க்கமான பார்வையும் இல்லாத அறிக்கை என்றும் சாடியுள்ளார்.