ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் வருகிற புதுவருடம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் தேதி திறக்கப்படுகிறது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் 108 வைணவ தேசங்களில் முதன்மை வாய்ந்ததாகும். இந்தத் திருக்கோயில் பூலோக வைகுந்தம் என்றும் பெரியகோயில் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தத் திருக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி மிகவும் பிரசித்திபெற்ற திருவிழாவாக கொண்டாடப்படும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், தற்போது இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் இல்லாத காரணத்தால் வெகு சிறப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு ஏகாதசி திருவிழா டிசம்பர் 22 ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்க உள்ளது. அன்று இரவு 7 மணிக்கு கோயில் கருவறையில் இந்த நிகழ்வு தொடங்கும். டிசம்பர் 23 ஆம் தேதி பகல்பத்து விழா தொடங்குகிறது.
இதையடுத்து, பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாளான ஜனவரி 1 ஆம் தேதி பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சியளிப்பார். அன்றைய தினம் பரமபத வாசல் என்று அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கப்படும். ஜனவரி 2 ஆம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெறும். மேலும் 5.30 மணிக்கு சொர்க்கவாசலை கடந்து திருகொட்டகையில் பக்தர்களுக்கு பெருமாள் காட்சி தருவார்.
இதைத்தொடர்ந்து ஜனவரி 8 ஆம் தேதி திருக்கைத்தல சேவையும், ஜனவரி 9 ஆம் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும் நடைபெறும். மேலும் ஜனவரி 11 ஆம் தேதி தீர்த்தவாரியும் ஜனவரி 12 ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவுபெறும்.
வாரிசு திரைப்படத்திலிருந்து வெளிவந்த மூன்றாவது பாடல்…கவருமா அம்மா சென்டிமென்ட்?