வலுக்கட்டாயத்தின் பெயரில் நிகழும் புலம்பெயர்தல் என்பது மிகவும் கடினமான ஒன்று. தனிப்பட்ட நபருக்கு நேர்ந்தாலும் சரி, ஒரு சமுதாயத்திற்கே நேர்ந்தாலும் சரி, புலம்பெயர்தல் ஒரு மனிதனைப் பல விதங்களில் பாதிக்கும். இந்தியா உட்பட பல நாடுகள், வேறு நாடுகளில் இருந்து பலதரப்பட்ட சூழல்களால் தங்களின் நாட்டுக்கு வந்த மனிதர்களை அகதிகளாகவும் தனித்துவமாகவும் பார்க்கிறது, நடத்துகிறது. யாவரும் ஊரே யாவருங் கேளிர் என்ற கூற்றை நாம் பின்பற்றுகிறோமா என்றால் அது கேள்விக்குறிதான்.
புலம்பெயர்ந்து அகதிகளாக வாழும் நபர்களை உற்று நோக்கினால், அவர்களின் சோகம் இன்றளவும் தென்படும். உலக வரலாற்றில் ஒவ்வொரு முறை போர் நடைபெறும்போதும் ஆயிரம் முதல் கோடிக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப் படுகின்றனர். என் சொந்தத் தாய் நாட்டில் என்னால் வாழ இயலவில்லை என அடுத்த நாடுகளுக்கு செல்லும் மனிதர்களின் மனநிலை எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கும்.
இப்படியான பாதிப்புகளுக்கு அடித்தளம் அமைத்துக்கொண்டிருக்கிறது, இரஷ்யா – உக்ரைன் போர். இரஷ்யா உக்ரைன் மீது நடத்தி வரும் தொடர் தாக்குதலால் அங்கு பதற்ற சூழலே நிலவ, உக்ரைனில் இருக்கும் மக்கள் அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்ந்து தஞ்சம் அடைந்து வருகின்றனர். அண்டை நாடுகளுக்கு செல்லும் உக்ரைன் மக்கள் மனதில் இருக்கும் வலியினை யாவராலும் சொல்லித் தீர்க்க முடியாது என்கிறது, உலக நாடுகள்.
தான் பிறந்து வளர்ந்த வீதியை, வீடுகளை, உடனிருந்த தோழமைகளை இழந்து துயரத்தில் நாட்டை விட்டு வெளியேறும் மக்களின் மனதை, இங்கே பிறந்து இங்கேதான் வளர்ப்போகிறோம் என்று எண்ணிய சிறுவர்கள்..தங்களின் எண்ணத்தை அழித்து அண்டை நாட்டுக்கும் குடியேறும் காட்சிகளை, இங்கேதான் பிறந்தோமா? என்று பிற்காலத்தில் கேள்வி எழுப்பும் வகையில் கைகளில் இருக்கும் மாதக் கணக்கே ஆன குழந்தைகளை தோளில் சுமந்த படியே நகரும் பெற்றோர்களை இவ்வுலகம் பார்த்தபடியே இருக்கிறது. புலம்பெயர்பவர்களுக்கு மட்டும் அல்ல பார்ப்பவரையும் கலங்கடிக்கிறது, உக்ரைன் நிகழ்வுகள்!
போர் ஆரம்பித்தில் இருந்து இன்று வரை 3.68 இலட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து அகதிகளாக உள்ளதாக ஐக்கிய நாடுகளின் சபையின் அகதிகள் முகைமை அறிவித்துள்ளது. மேலும், போர் நீடித்தால் இன்னமும் அதிக அளவிலான மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைவர் என்று தெரிவவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி உலக மக்களை துயரத்தில் ஆழ்த்தி வருகிறது.