எக்ஸ் – இ புது மாதிரி வகை ஓமிக்ரான் இந்தியாவில் முதல் முறையாக மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை தலைநகரில் ஒரு நபருக்கு கண்டறியப்பட்டது என தகவல்கள் செய்தி ஊடகங்களில் வெளியானது. மேலும் இச்செய்தி மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது என தெரிகிறது.
இந்த தகவல் தவறான மற்றும் பொய்யான கருத்து என்றும் இதுவரை எக்ஸ் – இ புது மாதிரி வகை ஓமிக்ரான் இந்தியாவில் கண்டறியப்படவில்லை என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று ஏப்ரல் 7 உலக சுகாதார தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கல்லூரி மாணவர்கள் பலர் மணற் சிற்பங்களை உருவாக்கி வருகின்றனர். இதனைத் துவங்கி வைக்க சென்ற தமிழ்நாடு மருத்துவ மற்றும் நல்வாழ்வுத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், இதுவரை தமிழகத்தில் ஆய்வு செய்ததில் எக்ஸ் – இ புது மாதிரி வகை ஓமிக்ரான் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்தார். மேலும் இதுகுறித்து மக்கள் வீண் பதற்றம் அடைய வேண்டாம் எனவும் உருமாறுவது வைரஸின் இயல்பு தான் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் அவர், முகக் கவசம் அணிவது குறித்து மக்களிடையே தவறான புரிதல்கள் இருக்கிறது என்றும் பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் இதுவரை 110 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும் அபராதத்திற்கு பயந்து முகக் கவசம் அணியாமல் மக்கள் விழிப்புணர்வுடன் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் புதிய வகை கொரோனா எச்சரிக்கை உள்ளதால் மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது, அனைத்து பாதுகாப்பு விதிகளையும் மதித்து நடக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
புதிய வகை எக்ஸ் – இ ஓமிக்ரான் தொற்று இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் வேகமாக பரவி வருது குறிப்பிடத்தக்கது. அந்நாடுகளில் மீண்டும் தொற்று கட்டுப்பாட்டு விதிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.