சென்னை மாநகராட்சித் தேர்தல் களம் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அஇஅதிமுக, பாஜக, பாமக போன்ற பல முன்னனி கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட தொடங்கியுள்ளது. இந்நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தற்போது தீவிர வாக்கு சேகரப்பில் ஈடுபட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் 182 வேட்பாளர்களை கமல்ஹாசன் அவர்கள் அறிமுகம் செய்துவைத்தார். வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்த பின் கமல்ஹாசன் அவர்கள் பேசத்தொடங்கினார்.
40 ஆண்டுகளாக நற்பணி இயக்கமாக இருக்கும்போது நான் சொல்லிக்கொண்டிருந்த அதே அறிவுரைகள் இன்று கொள்கைகளாக மாறி இருக்கிறது என்றும் தலைவர்களை தேடுவதை விட்டுவிட்டு, சமூக சேவகர்களை நாம் தேட வேண்டும் என்றும் அரசியல்வாதிகள் தக்கவைத்த ஏழ்மையை நீக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், பேசிய கமல்ஹாசன் அரசு, ஆட்சி என்பதை இருண்ட காலத்துக்கு எடுத்து செல்ல முற்படுகிறார்கள் இவர்கள். ஏழ்மையை இவர்கள் தக்க வைத்து கொண்டிருக்கிறார்கள். பாதுகாத்து கொண்டிருக்கிறார்கள். அதை நீக்க ஒவ்வொருவரும் வேலை செய்ய வேண்டும் என்றார்.
பெண்கள் பகுதி நேர அரசியலுக்கு வந்தாலே நாடு நன்றாக மாறி விடும் என்றவர், கிராமசபை கூட்டம் குறித்தும், மனித கழிவுகளை மனிதனே அகற்றும் இழி நிலை குறித்தும் பேசினார்.
‘நம்மீது திணிக்கப்பட்டிருக்கும் தரமற்ற அரசியலை மாற்றி, மக்கள்நலனை முன்னிறுத்தும் நேர்மையான அரசியலைச் செய்ய தீவிரமாகக் களத்தில் நிற்கிறோம். பகாசுர ஊழல்பேர்வழிகளை எதிர்த்துப் போராட பணஉதவி செய்யுங்களென உரிமையுடன் உங்களிடம் கேட்கிறேன்’ என ஏற்கனவே கூறியதன்படி நிதி திரட்டலையும் கமல்ஹாசன் மேற்கொண்டார்.