மணிரத்னம் – இந்திய திரையுலகமே வியந்து காணும் ஒரு இயக்குநர். ஒவ்வொரு முறை மணிரத்னம் இயக்கத்தில் இருந்து திரைப்படங்கள் வெளியாகும்போதும் மக்களிடையே எழும் எதிர்பார்ப்புகள் ஏராளமானவை. இவர் இயக்கும் அனைத்து திரைப்படத்திற்கும் இருக்கும் எதிர்ப்பார்ப்பை விட தற்போது மணிரத்னம் இயக்கி கொண்டிருக்கும் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகம்! இந்த அதிக எதிர்ப்பார்ப்பை உடைய திரைப்படத்தின் பெயர் பொன்னியின் செல்வன்!
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டு வரும் திரைப்படம்தான் இந்த பொன்னியின் செல்வன். உங்களின் கனவு திரைப்படம் என்ன என்ற கேள்வி மணிரத்தனம் அவர்களிடத்தில் கேட்கப்படும்போது, மணிரத்னம் தந்த பதில் “பொன்னியின் செல்வன்”. அப்போது ஆரம்பித்த எதிர்ப்பார்ப்புதான் தற்போது வரை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக படப்பிடிப்பில் இருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என்று பலரும் ஆவலுடன் காத்திருக்க, மக்களின் ஆவலுக்கு பதிலாய், பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி என்று படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பே காத்திருந்த ரசிகர்களுக்கு கொண்டாட்டமாய் அமைய, இன்னொரு நிகழ்வையும் தந்து ரசிகர்களை இன்னும் கொண்டாட்டத்தில் ஈடுபட வைத்திருக்கிறது, படக்குழு!
அந்த நிகழ்வு என்னவெனில், பொன்னியின் செல்வன் கதையின் முக்கிய கதாப்பாத்திரத்தின் புகைப்படங்களை வெளியிட்டதுதான். அதன்படி, வெளிவந்திருக்கும் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், திரிஷா, ஐஸ்வர்யா போன்றோரின் கதாப்பாத்திர புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த வண்ணம் உள்ளன.
சமூக வலைத்தளம் முழுவதும் தற்போது பொன்னியின் செல்வன் பதிவுகளால்தான் நிறைந்து காணப்படுகிறது. இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் அவர்கள் இசையமைக்க, ரவிவர்மன் அவர்கள் ஒளிப்பதிவு செய்ய பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
முதல் பாகம், இரண்டாம் பாகம் என பாகங்கள் முறையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கத்தது. இவ்வருடம் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகிறது.