பாவங்களையும், தோஷங்களையும் போக்கும் மாசிமகம் இந்த ஆண்டு வருகினற பிப்ரவரி 17-ம் தேதி நடைபெறுகிறது. பொதுவாக நாம் கோயில்களுக்கு சென்று இறை வழிபாடு மேற்கொள்ளும்போது நம்முடைய உடலால் நம்மை தூய்மை படுத்திக்கொள்வதற்கும், நம்முடைய பாவங்களை நீக்கி புண்ணியத்தை எடுத்துக் கொண்டு இறை வழிபாடு செய்வதற்கும், புனித நீராடல் மேற்கொண்டு வருகின்றோம். அப்படி புனித நீராடும் நதிகளே மேலும் புனித தன்மை அடைவது மாசி மாதத்தில் பௌர்ணமியும், மக நட்சத்திரமும் சேர்ந்து வரக்கூடிய திருநாளில் தான். மாசிமக தினத்தில் கும்பகோணம் மகாமகத்தில் புனித நீராடி விளக்கு வழிபாடு செய்து வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இப்படி அற்புதமான மாசிமக திருநாளில் கும்பகோணத்தில் இருக்கக் கூடிய மகாமகம் குளத்திற்குள்ளேயே பல தீர்த்தங்களும் அமைந்திருக்கின்றது. பல தீர்த்தங்களோடு சேர்த்து அன்றைக்கு இந்த நவநதிகளும் மாசிமக திருநாளில் கூடுகின்றன. இத்திருநாளில் நாமும் அந்த குளத்தில் நீராடுகின்ற போது, நவநதிகளில் நீராடிய புண்ணியமும், அந்த நதிகள் பெற்ற புண்ணியமும் நமக்கு கிடைக்கும்.
பூ மருவும் கங்கை முதல் புனிதமாம் பெரும் தீர்த்தம்
மா மகம் தான் ஆடுதற்கு வந்து வழிபடும் கோயில்
தூ மருவும் மலர்க் கையால் தொழுது வளம் கொண்டு அணைந்து
காமர் கெட நுதல் விழித்தார் கழல் பணிந்து கண் களித்தார்.
என்ற பாடல் பெரியபுராணத்தில் அழகாக இடம் பெற்றுள்ளன.
மாசி மக பௌர்ணமி அன்று கோவில்களில் சிவன், விஷ்ணு, முருகன் ஆகிய மூவருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், யாகங்கள், உற்சவங்கள் நடைபெறுகின்றன. அன்று இருக்கும் விரதம் நமக்கு சிறப்பான பலன் தரும். மாசி மாத பவுர்ணமியன்று சத்யநாராயண பூஜை செய்வதும் மற்றும் மாலை நேரத்தில் சூர்ய அஸ்தமனத்திற்கு பின்னர் அம்மன் கோயில்களில் வழிபாடு செய்வதும் அதிக நன்மைகள் தரும்.
மாசி மாத பௌர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் சமயம் வண்டுகள் மொத்தமாக பறக்கும் காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு ஏற்படுமானால் உங்களின் பல மனிதப்பிறவிகளின் கர்மங்கள் அந்த நொடி பொழுதே தொலைந்ததாக ஐதீகம். கணவனை பிரிந்து வாழ்பவர்கள், கணவரின் அன்புக்கு ஏங்கும் மனைவிகள் மாசி பௌர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலம் சென்று வழிபடுவதால் கணவனின் அன்பை பெற்று இணைபிரியாமல் வாழும் அமைப்பு உண்டாகும். எனவே மாசிமக நாளில் வரும் பௌர்ணமி விரதத்தை கடைப் பிடித்து, அம்மையப்பனை வழிபட்டு வாருங்கள்.