சென்னை காமராஜர் சாலையில் அணிவகுத்து வந்த சொகுசு கார்களுக்கு அபராத தொகை விதிக்கப்பட்டதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர்.
சென்னை, காமராஜர் சாலை, நேப்பியர் பாலம் வழியே நேற்று காலை ஏராளமான விலை உயர்ந்த சொகுசு கார்கள் வரிசையாக அணிவகுத்து வந்தன. தனியார் நிறுவனத்தின் விளம்பரத்துக்காக கார்கள் அப்படி அணிவகுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. மிக வேகமாக வந்த கார்களை பார்த்த பிற வாகன ஓட்டிகள் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
அப்போது அங்கு விரைந்து வந்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து காவல்துறையினர் அணிவகுத்து வந்த கார்களை நிறுத்தி சோதனை செய்தனர். மேலும் வாகனங்களை இயக்கி வந்த ஓட்டுநர்கள் மதுபோதையில் இருந்தார்களா? என சோதனை செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அந்தக் கார்களின் நம்பர் பிளேட்டுகள் மோட்டார் வாகன சட்டத்தின் விதிகளுக்கு புறம்பாக இருப்பதாகவும், அதிக ஒலி எழுப்பியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு, மொத்தம் 8 கார்களுக்கு அபராத தொகை விதிக்கப்பட்டதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதன்படி, 4 கார்களுக்கு தலா 2,500 ரூபாய் வீதமும், 3 கார்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதமும், ஒரு காருக்கு 1500 ரூபாய் வீதமும் என மொத்தம் 17,500 ரூபாய் என அபராத தொகைக்கான சலான் வழங்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே அந்தக் கார்களின் அழகை பார்த்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள், சொகுசு கார்களுடன் நின்று செல்பி புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.
நியூசிலாந்தின் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கும் இந்திய ரசிகர்கள்!