15-வது ஐபிஎல் தொடரில் நடைபெற்ற எட்டாவதுப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில், கொல்கத்தா அணியானது டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸ்
பந்துவீச்சைத் தேர்வு செய்ததுக்குப் பலனாக முதல் ஓவரிலேயே பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் விக்கெட்டை கைப்பற்றினார், உமேஷ் யாதவ். இதன்பின் களம் இறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன் பானுகா ராஜபக்சே மிக அதிரடியாக விளையாடி ஒன்பது பந்துகளில் 31 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சிதறடித்துவிட்டார்.
சிவம் மாவி பந்துவீச்சில் பானுகா ராஜபக்சே பெவிலியன் திரும்பியப் பின்புதான் கொல்கத்தா அணி பெருமூச்சு விட்டது. இந்த அதிரடி ஆட்டத்திற்குப் பின் பஞ்சாப் அணியிலிருந்து வீரியமிக்க பேட்டிங் ஏதும் நடக்கவில்லை. ஆம்! இதற்கு பின்பு வந்த அத்தனை வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ரபாடா 25 ரன்கள் சேர்த்து பஞ்சாப் அணிக்கு ஆறுதல் அளித்தார்.
மொத்தத்தில் 18.2 ஓவர்களிலேயே தனது மொத்த விக்கெட்டையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணித்தரப்பில் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இரண்டாம் இன்னிங்ஸ்
138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங்கில் களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் ரஹானே 12 ரன்களில் பெவிலியன் திரும்ப, சுப்மன் கில் மூன்று ரன்களில் வெளியேறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இதன்பின் களமிறங்கிய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராகுல் சஹார் பந்துவீச்சில், ராபாடவின் கேட்ச்சில் தனது விக்கெட்டை இழந்தார். 51 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்திற்கு உள்ளானது.
இந்த தடுமாற்றத்தில் இருந்து கொல்கத்தா அணியை மீட்க ஒரு வீரியமிக்க பேட்டிங் தேவைப்பட்ட நிலையில், களத்திற்கு வந்த நிதிஷ் ராணா பூஜ்ஜிய ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.
இந்த தடுமாற்றத்தில் இருந்து தனது அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணியை ரசல் மீட்டார். ஆம்! பஞ்சாப் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார், ரசல் 31 பந்துகளில் 71 ரன்கள் என்ற ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மைதானத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமல்ல, கைப்பேசி, தொலைக்காட்சியில் இப்போட்டியில் பார்த்திருந்தவர்களும் ஆச்சரியத்துக்கும் குதூகலத்துக்கும் உள்ளானர்கள். ரசலின் இந்த அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணியானது 14.3 ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றிவாகை சூடியது. இதன் மூலம் கொல்கத்தா அணியானது புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.