சுவிஸ் ஓபன் சாம்பியன்ஷிப் 2022 பேட்மிண்டன் தொடரானது ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள பசேல் நகரில் நடைபெற்று வருகிறது. ஆல் இங்கிலாந்து ஓபன் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறி அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாகிய இந்தியாவின் இளம் வீரர் லக்சயா சென், இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனால் இந்த தொடரில் பங்கேற்கும் மற்ற இந்திய வீரர்களின் மீது கடும் எதிர்பார்ப்பு எகிறியது. அவர்களும், சிறப்பாக விளையாடி அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறினர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய ஓபனில் பட்டம் வென்ற சாத்விக்சாய் ரெட்டி மற்றும் சிராக் ரெட்டி இணை இரண்டாவது சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றம் அளித்தது. கலப்பு இரட்டையரிலும் ஒருவர் கூட வெற்றி பெறாமல் தொடக்க சுற்றுகளிலேயே வெளியேறினர்.
பெண்கள் ஒற்றையரில் லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் சாய்னா நேவால் இந்த தொடரிலும் 2வது சுற்றிலேயே வெளியேறினார். சமீப காலங்களாகவே தன்னுடைய ஆட்டங்களில் சிறுதடுமாற்றத்தை வெளிப்படுத்துகிறார் சாய்னா.
மற்றபடி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அனைத்து வீரர்களும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்துவும், பெண்கள் இரட்டையர் பிரிவில் அஷ்வினி பொன்னப்பா மற்றும் ரெட்டி என்.சிக்கி இணையும் காலிறுதிக்கு முன்னேறினர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் 37ஆம் நிலை வீரர் பாருபள்ளி காஷ்யப்பும், இந்தியாவின் 26ஆம் நிலை வீரர் பிரனாய் ஹெச்.எஸ்ஸும் மோதிக்கொண்டனர்.
போட்டியின் முடிவில் பிரனாய் ஹெச்.எஸ் 21-16, 21-16 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்றார். இந்த தொடரில் அவர் சந்தித்த 3 எதிராளிகளில் 2 பேர் இந்தியர்கள்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தோனேஷியாவின் 5ஆம் நிலை வீரர் அந்தோணி சினிசுகா ஜின்டிங் மற்றும் இந்தியாவின் 27ஆம் நிலை வீரர் சமீர் வெர்மாவும் ஆடினார். இதில் ஜின்டிங் எளிதாக சமீர் வெர்மாவைத் தோற்கடித்தார்.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் 12ஆம் நிலை வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், உலகின் 3ஆம் நிலை வீரரான டென்மார்க்கின் ஆண்டெர்ஸ் ஆண்டன்சனை எதிர்கொண்டார்.
மிகவும் கடுமையாக அமைந்த இப்போட்டியின் முதல் செட்டை 21-19 என ஸ்ரீகாந்த் கைப்பற்றினார். இரண்டாவது செட்டை ஆண்டெர்சன் 19-21 என கைப்பற்ற ஆட்டத்தில் விறுவிறுப்பு எகிறியது. போட்டியை முடிவு செய்யும் மூன்றாவது செட்டை 22-20 என ஸ்ரீகாந்த் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.
பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் 7ஆம் நிலை வீராங்கனை பி.வி.சிந்து, கனடாவின் 12ஆம் நிலை வீராங்கனை மிச்செல் லியை எதிர்கொண்டார். மிக எளிதாக இந்த ஆட்டத்தில் 21-10, 21-19 என எளிதாக வெற்றி கொண்டார் பி.வி.சிந்து.
இந்த தொடரில் பி.வி.சிந்து பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது. இவர் தன்னுடைய அரையிறுதி ஆட்டத்தில் தாய்லாந்து நாட்டின் 29ம் நிலை வீராங்கனை சுபநிண்டா கேடெட்ஹாங்கை எதிர்கொள்ள இருக்கிறார்.
பெண்கள் கலப்பு இரட்டையரில் அஷ்வினி பொன்னப்பா மற்றும் ரெட்டி என்.சிக்கி இணை விளையாடியது. இந்த இணையானது மலேசியாவின் விவியன் ஹூ மற்றும் லிம் சியூ சியென் இணையிடம் 22-20, 23-21 என தோல்வியைத் தழுவியது.
வெற்றி பெற்றவர்களுக்கான அரையிறுதி ஆட்டங்கள் இன்று மாலை நடைபெறும். இந்த தொடரில் இந்திய வீரர்களின் கைகள் ஓங்கியுள்ள நிலையில் முடிவுகளைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்