இந்தியாவில் முதன் முதலாக தொழில்நுட்ப கல்லூரியை நிறுவுவது குறித்து 1946-ம் ஆண்டு ஜோஹேந்திர சிங் என்பவர் குழு ஒன்றை அமைக்கிறார். 22 பேர் கொண்ட இந்த குழுவை என்.ஆர். சர்கார் என்பவர் வழிநடத்தினார்.
இந்த குழு சமர்பித்த முதல் அறிக்கையில் கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் நான்கு உயர் தொழில்நுட்ப கல்லூரிகளை நிறுவுவதற்கு பரிந்துரைத்தது. மேலும், உடனடியாக கிழக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் உயர் தொழில்நுட்ப கல்லூரிகளை நிறுவ வேண்டுமென்று கூறியது.
வெளிநாடுகளில் உள்ள முதல்நிலை கல்லூரிகளில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு இணையாக நாமும் நம் மாணவர்களை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது சர்கார் தலைமையிலான குழு. மேலும், உருவாக உள்ள உயர் தொழில்நுட்ப கல்லூரிகள், இளங்கலை கல்விக்காக மட்டுமல்லாமல் முதுகலை கல்விக்காகவும், அறிவியல் ஆராய்ச்சிக்களுக்காவும், தொழில்நுட்ப ஆசிரியர்களை உருவாக்குவதற்காகவும் இருக்க வேண்டும் என்றும் அக்குழு தெரிவித்தது.
பின்னாளில், சுதந்திர வேட்கை தீவிரமாக தொழில்நுட்ப கல்லூரி குறித்த முடிவுகள் சற்று தாமதமாகின. ஆனால், இந்த தாமதம் வெகுநாள் நீடிக்க வில்லை 1947-ம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்க மக்கள் ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’ என சுதந்திரத்தை கொண்டாடினர்.
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததில் இருந்து மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் முதல் உயர் தொழில்நுட்ப கல்லூரி நிறுவப்பட்டது. என்.ஆர். சர்கார் தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கையின்படியே, 1950-ம் ஆண்டு தி இன்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி எனப்படும் ஐஐடி மேற்கு வங்காளத்தில் உள்ள கர்க்பூரின் ஹிஜிலி பகுதியில், அப்போதைய கல்வி அமைச்சரான மௌலான அபூல் கலாம் அசாத் என்பவரின் முன்னெடுப்பாலும், அன்றைய பிரதமர் ஜவர்ஹலால் நேருவின் உதவியாலும் நிறுவப்பட்டது. அதன்பின்னர் 1951-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி 224 மாணவர்களுடனும் 42 ஆசிரியர்களுடனும் ஐஐடியில் முதல் வகுப்பு நடைபெற்றது.
இந்திய வரலாற்றில், தற்போது இந்தியாவின் 23 நகரங்களில் இயங்கி வரும் ஐஐடிகளின் அடித்தளமான கரக்பூர் ஐஐடியில் முதல் வகுப்பு நடைபெற்ற நாள் இன்று!