இந்தியன் கால்பந்து லீக் தொடரின் 8-வது சீஸனின் அரையிறுதி முதலாவது சுற்றில் ஜாம்ஷெட்பூர் அணியை ( 0-1 ) என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வீழ்த்தியது.
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 8-வது சீசன் கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வந்த இந்த தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைந்து புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த அணிகளான ஜாம்ஷெட்பூர் ( 13 வெற்றி, 4 டிரா, 3 தோல்வி ), ஐதராபாத் ( 11 வெற்றி, 5 டிரா, 4 தோல்வி ), ஏடிகே மொகுன் பஹான் ( 10 வெற்றி, 7 டிரா, 3 தோல்வி ), கேரளா பிளாஸ்டர்ஸ் ( 9 வெற்றி, 4 டிரா,7 தோல்வி ) அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.
அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள் தங்களது எதிர் அணியுடன் தலா இருமுறை மோத வேண்டும். முடிவில், அதிக வெற்றிகள் அல்லது கோல் அடிப்படையில் முன்னிலை வகிக்கும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இதின் முதலாவது அரையிறுதியின் முதல் ஆட்டத்தில் புள்ளிபட்டியலில் முதலிடம் பிடித்த ஜாம்ஷெட்பூர் அணியும், 6 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு முன்னேறிய கேரளா அணியும் நேற்று மோதிக்கொண்டன.
ஜாம்ஷெட்பூர் அணி தனது கடைசி 7 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடந்த இப்போட்டியில் இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் கடுமையாக மோதிக்கொண்டன. ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்சின் சமர் சமாட் கோல்கீப்பரை ஏமாற்றி அற்புதமாகக் கோல் அடித்தார். ஆட்டத்தின் முடிவில் கேரளா பிளாஸ்டர்ஸ் ( 0-1 ) என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் முன்னிலை பெற்றுள்ள கேரளா அணி 2-வது சுற்றில் வெறும் டிரா செய்தாலே போதுமானது.ஜாம்ஷெட்பூர் அணி இறுதி போட்டிக்கு முன்னேற வேண்டுமாயின் வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாமல் கோல் கணக்கிலும் முன்னிலை பெற வேண்டும்.
இன்று நடைபெறப்போகும் இரண்டாவது அரையிறுதியின் முதல் போட்டியில், ஐதராபாத் மற்றும் எடிகே மொகுன் பஹான் அணிகள் இரவு 7.30 மணி அளவில் மோதிக்கொள்கின்றன.