ஐ.எஸ்.எல் தொடரில் 8-வது சீசனின் முதல் அரையிறுதி இரண்டாவது ஆட்டத்தில் கேரளா மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள் இன்று மோதுகின்றன.
கொரோனா காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் ஐ.எஸ்.எல் தொடரானது கோவாவில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த ஜாம்ஷெட்பூர், ஹைதராபாத், ஏடிகே மொகுன் பஹான் மற்றும் கேரளா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதில் கேரளா அணி 6 ஆண்டுகளுக்குப் பின்னர் அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
ஐ.எஸ்.எல் கால்பந்தைப் பொறுத்த வரையில் அரையிறுதியில் விளையாடும் அணிகள் இருமுறை மோதிக்கொள்ள வேண்டும். போட்டிகளின் முடிவில் அதிக வெற்றி அல்லது அதிக கோல் கணக்கில் முன்னிலை பெரும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
கடந்த மார்ச் 11ஆம் தேதி நடந்து முடிந்த முதல் அரையிறுதியின் முதல் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணியை கேரளா பிளாஸ்டர்ஸ் அணி ( 0-1 ) என்ற கோல்கணக்கில் தோற்கடித்திருந்தது. அந்த அணியின் சமர் சமாட் வெற்றிக்கான அந்த கோலை அடித்தார். இதன் மூலம் வெற்றி மற்றும் கோல் கணக்கில் முன்னிலை பெற்றுள்ள கேரளா அணி இன்று நடைபெற இருக்கும் முதல் அரையிறுதியின் இரண்டாவது ஆட்டத்தில் வெறும் டிரா செய்தாலே இறுதிப்போட்டிக்கு எளிதாக முன்னேறிவிடும். ஆனால், ஜாம்ஷெட்பூரைப் பொறுத்தவரை இந்தப் போட்டி மிக முக்கியமானது ஆகும். இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாமல் கோல் கணக்கிலும் முன்னிலை பெற்றாக வேண்டும். அப்பொழுது தான் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.
இன்று இரவு 7.30 மணிக்கு கோவாவில் உள்ள திலக் மைதான் விளையாட்டு அரங்கில் நடைபெறும் இப்போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக முயற்சி செய்யும்.
மற்றொரு அரையிறுதியான, இரண்டாவது அரையிறுதியின் முதல் போட்டியில் ஹைதெராபாத் அணி ( 3-1) என்ற கோல் கணக்கில் ஏ.டி.கே மொகுன் பஹான் அணியை வீழ்த்தியிருந்தது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதியின் இரண்டாவது போட்டியானது நாளை நடைபெறும்.