ஜூன் 3ம் தேதி கருணாநிதியின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தை திறக்க அரசு தீவிரம் காட்டி வருவதாக செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துளளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிட கட்டுமான பணிகளை செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
திமுக தலைவராக இருந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகில் 2.21 ஏக்கர் நிலபரப்பில் 39 கோடி ரூபாய் மதிப்பில் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.
இந்த நிலையில் கருணாநிதியின் நினைவிட பணிகளில் உள்ள முன்னேற்றம் தொடர்பாக செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் கட்டுமானப் பணிகளை நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கருணாநிதியின் நினைவிட கட்டுமான பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் கூடிய விரைவில் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் மழையின் காரணமாக கட்டுமான பணிகளில் சிறிய அளவில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்றும் விரைவில் கட்டுமான பணிகள் முடிக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜூன் 3ம் தேதி கருணாநிதியின் நூறாவது பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கு முன்பாக பணிகளை முடிக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.