பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதித்து உத்தரவிட்ட கர்நாடக அரசின் தடைசெல்லும் என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள மகளிர் பல்கலைக்கழகத்தில் உள்ள கல்லூரிக்குள் ஹிஜாப் அணிந்துவரக்கூடாது என்று பல்கலைக்கழகத்தினர் கூறியதை எதிர்த்து 6 மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளின் இந்தப் போராட்டத்தை எதிர்க்கும் வகையில் வேறு பிரிவைச் சேர்ந்த மாணவிகள் காவி சால்வை போர்த்தியும் மற்றும் மாணவர்கள் காவித்துண்டுகளை அணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளுக்கு ஆதரவாகவும் அவர்களை எதிர்த்தும் அரசியல் கட்சிகளும் அரசியல் அமைப்புகளும் போராட்டத்தில் குதிக்க இந்த ஹிஜாப் பிரச்சனை தேசிய அளவிலான பிரச்சனை ஆனது. இதனைத்தொடர்ந்து, பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப், காவித்துண்டு போன்ற மத அடையாளங்கள் அணிந்து வர அம்மாநில அரசு தடை விதித்தது. இதனை ஏற்க மறுத்த உடுப்பி மாணவிகள் இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
வழக்கு விசாரணையின் முதல் நாளிலேயே மாணவ, மாணவிகள் ஹிஜாப் அல்லது காவித்துண்டு போன்ற எந்த மத அடையாளங்களையும் தாங்கியவற்றை அணிந்து வரக்கூடாது என இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம். ஹிஜாப் அணிவதற்க்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சுதந்திரம் உள்ள நிலையில், மாணவிகள் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால் இவ்வாறு நடந்துள்ளது என்று மனுதாரர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இந்த விவகாரத்தின் வீரியத்தை அறிந்த நீதிபதிகள் உடுப்பியில் 144 உத்தரவை முன்கூட்டியே பிறப்பித்து இருந்தனர். 11 நாட்கள் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணை கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி கடைசியாக விசாரிக்கப்பட்டு தீர்ப்புக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மாணவிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் தேவ்தத் காமத் மற்றும் ரவிவர்மகுமார் ஆகியோர் வாதிட்டனர். அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பிரபுலிங்க் நவ்தேகியும், உடுப்பி பி.யு கல்லூரியின் சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.எஸ்.நாகானந்தும் வாதிட்டனர்.
இந்நிலையில் வழக்கின் தீர்ப்புக்காக இன்று நீதிமன்றம் கூடியது. தீர்ப்பையொட்டி நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரில் மார்ச் 21ஆம் தேதிவரை மக்கள் பெருமளவில் கூடும் கூட்டங்களுக்குத் தடை விதித்தும், மங்களூருவில் மார்ச் 15 வரை தடை விதித்தும் உத்தரவிட்டியிருந்தனர். உடுப்பியில் ஏற்கனவே 144 தடை உத்தரவு இருக்கும் நிலையில் உடுப்பி, ஷிவமோஹா மற்றும் தட்ஷின கன்னடா பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
தீர்ப்பை வாசித்த நீதிபதிகள் ரீத்து ராஜ் அவஸ்தி, கிருஷ்ணா எஸ்.தீட்சித், ஜே.எம்.காஷி அடங்கிய குழு ஹிஜாப் அணிந்துகொள்வது இஸ்லாமிய மதத்தில் கட்டாயக்கொள்கை இல்லை என்றும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குள் அணிந்து வரக்கூடாது எனக்கூறியது எந்த விதத்திலும் தனிமனித சுதந்திரத்தைப் பாதிக்கவில்லை என்றும், எனவே கடந்த பிப்ரவரி 5, 2022ல் விதிக்கப்பட்ட தடை செல்லும் என அறிவித்தது. மேலும், பி.யு.கல்லூரி நிர்வாகத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது எனவும் கூறி தீர்ப்பளித்தது.