தேர்தல் என்று வந்தாலே, அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவது சகஜமான ஒன்று தான். சில கட்சிகளின் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில், தாக்கத்தை ஏற்படுத்த தவறுவதில்லை.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தாலும், பூரண மது விலக்கு என்ற வாக்குறுதியை அளிக்கவில்லை. இது தமிழக மக்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், திமுகவின் தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், திமுக அமோக வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனான மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்று ஆட்சி செய்து வருகிறார். எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பில் உள்ளார்.
தமிழக மக்களின் முக்கிய எதிர்ப்பார்ப்பாக இருப்பது பூரண மதுவிலக்கு தான். இந்நாள் வரையிலும், அதை யாரும் முன்னெடுக்க முன்வரவில்லை. ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில், மதுபானக் கடைகள் குறைக்கப்பட்டு, மதுபானக் கடைகள் திறக்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டது. இருப்பினும், தற்போதைய நிலையில், தமிழ்நாட்டில் 4,500-க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.
திமுக எம்.பி. கனிமொழி, கன்னியாகுமரி மாவட்டம் தொலையா வட்டத்தில் உள்ள ஒரு கல்லுாரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார். அப்போது, அவர் மாணவ – மாணவியர்களின் கேள்விகளுக்கு பதில் கூறினார். அச்சமயத்தில், ஒரு மாணவி, ‘திமுக தேர்தல் வாக்குறுதிப்படி தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா?’ என எம்.பி. கனிமொழியிடம் கேட்டார். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. மதுபானக் கடைகளை முழுவதுமாக மூடுவது முடியாத காரியம். ஆனால், படிப்படியாக குறைக்கலாம் என்று எம்.பி. கனிமொழி பதிலளித்தார்.
மேலும், மின் வெட்டு, மது விலக்கு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எந்த பதிலையும் அளிக்காமல் கனிமொழி மறுத்து விட்டார்.
இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.