உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும் துயர நிகழ்வுகளுக்கு ஒருவர் சிரிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதுவும் பெரும் பொறுப்புகளில் இருப்பவர்கள் துயர நிகழ்வுகளைக் கண்டு சிரிப்பதென்பது அறவே தவறானது. இப்படியான ஒரு நிகழ்வு அரங்கேறி, தற்போது அவை உலகம் முழுவதும் பரவலாகியும் பிரபலமாகியும் சர்ச்சைக்குள்ளாகியும் வருகிறது.
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்தான் தற்போது உலக அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறார். உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறது, உக்ரைன்! ரஷ்ய ராணுவம் மேற்கொண்டுள்ள போரால் தினந்தோறும் தங்களின் தாய் நாட்டை விட்டு பல்லாயிரக் கணக்கான உக்ரைன் மக்கள் வெளியேறி வருகின்றனர்.
நிர்பந்தத்தின் பெயரில் இடம்பெயர்தல் என்பது எப்போதுமே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றுதான். அப்படியான நிர்பந்த இடம்பெயர்தல்தான் தற்போது உக்ரைனில் நடைபெற்று வருகிறது. இதுவரை ஒரு நாட்டின் குடிமகன்களாக அந்தஸ்துடன் இருந்தவர்கள் தற்போது அகதிகளாக மாறி விட்டனர். இவர்களுக்கு உலக நாடுகள் என்னென்ன செய்யப்போகிறது என்பது தெரியவில்லை.
இப்படியான சூழலில்தான் போலந்து அதிபர் டுடா உடன் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டார். இச்செய்தியாளர்கள் சந்திப்பில் உக்ரைனில் இருந்து வெளியேறி வரும் மக்களுக்கு தாங்கள் என்ன செய்வதாய் திட்டம் வைத்துள்ளீர்கள் என்ற கேள்வியை நிருபர் ஒருவர் எழுப்ப அதற்கு கமலா ஹாரிஸ் அவர்கள் தனக்கு அருகில் இருந்த போலந்து அதிபர் டுடா அவர்களை பார்த்தபடியே இருந்தார். போலந்து அதிபரும் கமலா ஹாரிஸை பதிலுக்கு பார்க்க, உடனே கமலா ஹாரிஸ் அவர்கள் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். இடைவிடாது சிறிது நேரம் இருவரும் சிரித்தனர். சிரித்து முடித்த பின்னர், அமெரிக்கா போலந்து இரு தரப்பும் இணைந்து உக்ரைன் அகதிகளுக்கு தேவையான உதவிகளை செய்யும் என்று கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.
இந்நிகழ்வானது தற்போது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. உதவ வேண்டியவர்கள் இப்படியா சிரிப்பது என்றும், உக்ரைன் மக்களின் வலிகள் உங்களுக்கு புரியவில்லையா என்றும் இணையத்தில் கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.