சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என்றழைக்கப்படும் ஐசிசி அவ்வப்போது கிரிக்கெட் போட்டிகள் சார்ந்த தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஐசிசி டெஸ்ட் போட்டிகளின் ஆல்-ரவுண்டருக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அனைவரும் எதிர்ப்பார்த்தபடி இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா அவர்கள் இத்தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இலங்கைக்கு எதிரான தொடரில் ரவீந்திர ஜடேஜா விளையாடி வரும் விதமானது அசாத்தியமானது.
கடந்த டெஸ்ட் போட்டியில் கூட ரவீந்திர ஜடேஜா 175 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுக்காமல் இருந்ததுடன், தனது அபார பந்துவீச்சால் முதல் மற்றும் இரண்டாம் இன்னிங்ஸ் சேர்த்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரவீந்திர ஜடேஜாவின் இப்படியான ஆட்டம் இந்தியாவின் மாபெரும் வெற்றிக்கு மிக முக்கியமானதாக விளங்கியது. இலங்கை அணிக்கு எதிரான இந்த போட்டிகள்தான் ரவீந்திர ஜடேஜாவை தரவரிசைப்பட்டியலில் முதலிடம் பெறவும் உதவியாய் இருந்திருக்கிறது.
மேலும், ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் போட்டிகளின் ஆல்-ரவுண்டருக்கான தரவரிசைப் பட்டியலின்படி, 406 புள்ளிகளுடன் ரவீந்திர ஜடேஜா முதலிடத்திலும், 382 புள்ளிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் இரண்டாம் இடத்திலும் உள்ளார்.
இலங்கை அணிக்கு எதிராக இரட்டை சதம் அடிக்ககூடிய சாத்தியம் அனைத்து இருந்தும், ரவீந்திர ஜடேஜாவால் இரட்டை சதத்தை எட்ட முடியவில்லையே என்ற ரசிகர்களின் வருத்தத்திற்கு, ரவீந்திர ஜடேஜா முதலிடம் பிடித்துள்ள செய்தி ஆறுதலை தரவல்லதாக உள்ளது.