ஈவிகேஎஸ் இளங்கோவன் மார்ச் 10 ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான திருமகன் ஈ.வெ.ரா கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தத் தொகுதி காலியானதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 18 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இந்நிலையில் 15 சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை முடிவில் 1,10,556 வாக்குகளை பெற்று அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட சுமார் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் மார்ச் 10 ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது.
பதவி ஏற்பு குறித்த தேதியை சட்டமன்றத் தலைவர் உறுதி செய்வார் என ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். 34 ஆண்டுகளுக்கு பிறகு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குள் செல்வதை எப்படி உணர்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அன்றைக்கு ஏசி இல்லை எனவும், இன்றைக்கு ஏசி இருப்பதாகவும் கூறி இளங்கோவன் நகைச்சுவை செய்தார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றியைத் தொடர்ந்து, தமிழக சட்டமன்றத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
கத்தியால் குத்திய தமிழர்; சுட்டுக்கொன்ற காவல்துறை – ஆஸ்திரேலியாவில் அசம்பாவிதம்!